Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர்

“மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அசைந்தன. 1
சீதையை மணக்க இராமன் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பில் ஆடுவது போலக் கொடிகள் அசைந்தாடின. 2
மிதிலை மாடத்தில் வானளாவப் பறந்த வெண்ணிறக் கொடிகள் மேகத் துளிகளால் நனைந்துகொண்டும், அகில் புகைகளால் காய்ந்துகொண்டும் அசைந்தாடின. 3
மன்மதன் அமுத மையில் தோய்த்துச் சீதையை எழுதினான். முடியவில்லை. இத்தகைய சீதை திருமகளை ஏந்திக்கொண்டிருக்கும் தாமரை மலர் போல் விளங்கிய மிதிலை மூவரும் கண்டனர். 4
அகத்தியன் உண்ட கடல் போல் அகன்ற தெரு. வானத்து மீன்கள் போல அதில் மாடி வீடுகள். மைந்தரும், மகளிரும் வேண்டாம் என்று களைந்த அணிகலன்கள் கிடக்கும் மாடிவீடுகள். இவை இருக்கும் தெருவில் மூவரும் சென்றனர். 5

'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா!     1

நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார்.               2

பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார்         4

சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார்.              5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 10. மிதிலைக் காட்சிப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...