Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் காப்பு Kamba Ramayanam 10

ஆற்றுப்படலம் - காப்பு (கடவுள் வணக்கம்)
பிறர் பாடல்

1
அனைத்தும் ஒன்றாக விளங்குபவன். இரண்டு சுடர்களாக விளங்குபவன். மூன்று காலமாக விளங்குபவன். நான்கு வேதமாக விளங்குபவன். நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என ஐந்து பூதமாக விளங்குபவன். இவை அனைத்திலும் இல்லாதவனாக விளங்குபவன். நம் நெஞ்சுக்குள்ளே வாழ்பவன். நம் எண்ணத்தில் இல்லாமல் புறத்தே வாழ்பவன். இப்படி இருக்கும் ஒருவன் நிழலை நாம் நம் நெஞ்சில் வைத்துக்கொள்வோம்.
2
நீலநிறக் கடலில் சக்கரத்தைக் கையில் வைத்திருப்பவன். அவன் திருமால். நம் நெஞ்சிலிருக்கும் மயக்கம் நீங்க அவனை மகிழ்வோடு வணங்குவோம்.
3
நான்கு வேதங்களும் தொழுதுகொண்டிருக்க, நிலா போன்ற உருவுடன் நஞ்சு இருக்கும் பல்லுடன் ஆயிரம் தலை கொண்ட அனந்தன் என்னும் பாம்பின்மேல் விழித்துக்கொண்டே தூங்கும் மாயன் மலரடிகளைப் போற்றுவோம்.
4
திருமகளை நெஞ்சில் வைத்துக்கொண்டிருக்கும் மாது உளம் கனியை (மாதுளம் பழம்), பாற்கடலில் மலரும் தாமரை மொட்டை, நான்கு கை கொண்டவனை, தாயாக விளங்கும் பொன்னடிகளைப் போற்றுவோம்.
5
மறை வேதங்கள் தொழமுடியாத பரமன், கருணைக் கண்ணைக் கையில் வைத்திருப்பவன், தன் பாம்பு மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு அயோத்தி வந்திருக்கும் இராகவன் அடிகளைப் போற்றுவோம்.

ஒன்று ஆய், இரண்டு சுடர் ஆய், ஒரு மூன்றும் ஆகி,
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு, ஐம்பூதம் ஆகி,
அன்று ஆகி, அண்டத்து அகத்து ஆகி, புறத்தும் ஆகி,
நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம்.            1

நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை
மாலை மால் கெட, வணங்குதும் மகிழ்ந்தே.              2 (குறள்வெண்செந்துறை)

காயும் வெண்பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை,
மேய நான்மறை தொழ, விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம்.    3

மாதுளங் கனியை, சோதி வயங்கு இரு நிதியை, வாசத்
தாது உகுநறு மென் செய்ய தாமரைத் துணை மென் போதை,
மோது பாற்கடலின் முன் நாள், முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம்.           4

பராவ அரு மறை பயில் பரமன், பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்,
அரா-அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன், மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம். 5

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம் 

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...