Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் -காப்பு Kamba Ramayanam 11

காப்பு
பிறர் பாடல்

6
நெஞ்சமே! ஞாயிறும் திங்களும் செல்லாத இலங்கை வேந்தனை வானுலகம் செல்லும்படி அம்பு எய்தவனை நினை.
7
'நாராயணாய நம!' என்று நெஞ்சில் நினைப்பவரை எனக்குப் போற்றத் தெரியவில்லையே! ஏதோ கருணையைக் கையில் வைத்திருக்கும் மூர்த்திக்குப் பூசனை செய்துவருகிறேன்.
8
இராமன் தன் மனைவி, தம்பி ஆகியோருடன் காட்டுக்குப் போனான். விராதன், கரன், மான், கவந்தன், வாலி, இராவணன் ஆகியோரை அழித்துவிட்டு அயோத்தி திரும்பினான்.
9
தயரதன் மகன் இராகவன் கதையைச் சொல்ல நம்மாழ்வார் அருளை வேண்டுவோம்.
10
அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான காற்று பெற்ற மகன். ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்க்கடலைத் தாவிக் கடந்தான். ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயம் வழியே சென்றான். ஐந்து பூதங்களில் ஒன்றான மண் பெற்ற பெண் சீதையைக் கண்டான். ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை இலங்கையில் வைத்தான். அவன் அளி செய்து நம்மைக் காப்பாற்றுவான்.

கலங்கா மதியும், கதிரோன் புரவிப்
பொலன் கா மணித் தேரும், போகா இலங்கா
புரத்தானை, வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை, நெஞ்சே! தரி.             6  (வெண்பா)

'நாராயணாய நம!' என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து, ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.            7

பராவரும் இராமன், மாதோடு இளவல் பின் படரக் கான்போய்,
விராதனை, கரனை, மானை, கவந்தனை, வென்றிகொண்டு,
மராமரம், வாலி மார்பு, துளைத்து, அணை வகுத்து, பின்னர்,
இராவணன் குலமும் பொன்ற எய்து, உடன் அயோத்தி வந்தான்.            8

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்.       10

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...