Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 108

வேள்வி முடிந்தது

இராமன் அம்பு தாடகை பெற்ற ஆண்பிள்ளைகள் இருவரில் சுபாகு என்பவனைக் கொன்றது. மாரீசன் என்பவனைக் கடலில் வீசியது. 41
பிணத்தின் மேல் நடந்து இராமன் நம்மையும் பிடிப்பான் என்று எண்ணி மற்ற அரக்கர்கள் அஞ்சி ஓடிவிட்டனர். 42
ஓடிய அரக்கரின் தலையை இராமன் அம்பு வீழ்த்திற்று. தலை இல்லாத முண்டங்கள் கூத்தாடின. பேய்கள் அவற்றை உண்டு இராமன் புகழைப் பாடின. பறவைகள் பிணம் உண்ணப் பந்தலிட்டது போலப் பறந்தன. 43
தேவர்கள் பொழிந்த பூ மழை பறவைப் பந்தலைக் கிழித்தது. இந்திரன் முதலான தேவர்கள் இராமனின் வில்லைத் தொழுது வாழ்த்தினர். 44
முனிவர்கள் பூமாரி பொழிந்தனர். மரங்களும் பூக்களைச் சிந்தின. விசுவாமித்திரன் தன் வேள்வியை முற்றிலுமாக நிறைவேற்றினான். இராமனிடம் கூறலானான். 45

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.            41

துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
'பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு' எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார்.            42

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே.         43

பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.                44

புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்;            45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...