![]() |
அரக்கர் தோற்றம் |
உணவைக் கவர வெளியில் தெரியும் பல், அந்தப் பல் கடித்துக்கொண்டிருக்கும் வாய், செந்நிறத் தலைமுடி, கண்ணில் உழலும் தீ ஆகிய தோற்றம் கொண்டவர் அரக்கர். முனிவர் சொன்ன அரக்கர் இவர்கள் என்று இராமன் இலக்குவனுக்கு அவர்களைக் காட்டினான். 36
இவர்கள்ளின் உடல் துண்டாகி விழுவதை இனிப் பார் என்று சொல்லிக்கொண்டு இலக்குவன் தன் வில்லையும், அரக்கரையும் பார்த்தான். 37
அரக்கர் தசைகளும் இரத்தமும் வேள்வித் தீயில் விழும் என்று இராமன் தன் அம்புகளால் வேள்விக்கு மேல் கூடாரம் அமைத்தான். 38
பிறைநிலா சிவனைத் தஞ்சம் அடைந்தது போல, முனிவர்கள் “இராமா! அபயம்” என்றனர். 39
“கலங்காதீர்கள்” என்று சொல்லிக்கொண்டு அம்பெய்து அரக்கரின் தலைகளை இருவரும் குன்றாகக் குவித்தனர். 40
கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
'பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்' என, இலக்குவற்கு இராமன் காட்டினான். 36
ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக,
விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்;
'அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன' என, தொழுது சொல்லினான். 37
'தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும்' என்று உன்னி, அத்
தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு,
கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான். 38
நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
'அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்' என்றார். 39
தவித்தனன் கரதலம்; 'கலங்கலீர்' என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. 40
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment