Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 110

மிகைப் பாடல்கள் – பகுதி 1 – நூறு மகளிர்

மானச மடுவில் தோன்றி ஓடிவருவருவதால் ‘சரயு’ என்று இந்த ஆற்றை அமரர்கள் போற்றுகிறனர். இந்த அற்றில் கோமதி என்னும் ஆறு வந்து கலக்கும் ஓசைதான் இங்குக் கேட்கின்றது என்று விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறினார். 4-1
“தேவர் தொழும் ஆறு என்றது ஏன்?” என்று இராமன் வினவினான். முனிவர் விளக்குகிறார். குசன் மக்கள் நான்பேர். 4-2
கவுசாம்பி நாட்டில் வாழ்ந்த குசன், மகோதயம் நாட்டில் வாழ்ந்த குசநாபன், தன்மவனம் என்னும் பகுதியில் வாழ்ந்த ஆதூர்த்தன், வக்கிரி-விரசம் என்னும் பகுதியில் வாழ்ந்த வசு என்போர் அந்த நால்வர். 4-3
இவர்களில் குசநாபர்க்கு நூறு பெண்பிள்ளைகள். இவர்கள் தம் தோழிமாருடன் பூங்காவில் இருந்தபோது ‘வாயு’ அவர்களைக் கவர நினைத்தான். 4-4
அவர்களிடம் சென்று “காமன் அம்புகளால் நோகிறேன். என்னை அணைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “என் தந்தையிடம் சொல்லுங்கள்; அவன் எங்களை உனக்குத் தாரை வார்த்துத் தந்தால் அணைக்கிறோம்” என்றனர். இச்சொற்களைப் பொறுத்துக்கொள்ளாத வாயு பலமாக வீசி அவர்களின் முதுகை ஒடித்தான். அதனால் அந்த மகளிர் அனைவரும் மண்ணில் வீழ்ந்தனர். 4-5

'மானச மடுவில் தோன்றி வருதலால், 'சரயு' என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன, அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்.              4-1

சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?' என்றே,
வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்;       4-2

'குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள்,
குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார்.      4-3

'அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி,
கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி,                4-4

'கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர்' என்று உரைப்ப, "எந்தை
அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும்" என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம்.                4-5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...