Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 67

போடிநாய்க்கனூர் ஓவியம் தயரதன் மனைவியர் மூவரும் கருவுறல் 
தயரதன் மனைவிமார் மூவரும் கருவுற்றனர்.

கலைக்கோடு முனிவன் உடன் வந்த முனிவர்களோடு தேரில் ஏறித் திரும்பிச் சென்றான். 96
வேள்விக்கு வந்த மன்னர்களும் முனிவர்களின் வாழ்த்தினைப் பெற்று மீண்டனர். 97
தயரதன் மனைவிமார் மூவரும் கருவுற்றனர். விரும்பியதை உண்ணும் வயா என்னும் ஆசை கொண்டனர். மதியம் போல உரு அழகும் கொண்டு தோன்றினர். 98
பருவம் வந்தது. கற்கடக மாதம், புனர்பூச நன்னாள். கோசலை வயிற்றில் குழந்தை துள்ளியது. 99
சித்தர், இயக்கர், இவர்களின் மனைவிமார், முனிவர், வானவர் ‘தருமம் ஓங்கிற்று’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 100

'எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன்' என்ன, ஒண் தவன்,
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி, தேர்மிசை
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான்.       96

வாங்கிய துயருடை மன்னன், பின்னரும்,
பாங்குரு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,
நீங்கினர்; இருந்தனன், நேமி வேந்தனே.          97

தெரிவையர் மூவரும், சிறிது நாள் செலீஇ,
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின்,
பொரு அரு திரு முகம் அன்றி, பொற்பு நீடு
உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினார்.        98

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,                99

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.        100

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...