Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 70

குழந்தை பிறந்த செய்தி முரசறைந்து அறிவிக்கப்பட்டது.

மகன்கள் பிறந்த செய்தியை வள்ளுவன் யானைமீதேறி முரசறைந்து அறிவித்தான். மக்கள் அளக்கமுடியாத இன்பம் கொண்டனர். 111
மக்கள் செய்தியைச் சொன்னவர்களுக்கெல்லாம் செல்வத்தை வழங்ககினர். 112
களிப்பின் மிகுதியில் எங்கும் எண்ணெய், சந்தனம், வெண்ணெய், நானம் என்னும் கத்தூரி, மணப்பொடிகள் ஆகியவற்றைத் தூவித் திளைத்தனர். 113
12 நாள் கழித்து வசிட்டன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்தான். 114
அரா அணையில் துயில்பவன் பிறந்திருப்பதை அறிந்துகொண்டு இராமன் என்றான் 115

என்புழி, வள்ளுவர், யானை மீமிசை
நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்,
மின் பிறழ் நுசுப்பினார் தாமும், விம்மலால்,
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார்.   111

ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்; வேர் பொடித்த; நீள் நிதி
தூர்த்தனர், எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;-
'தீர்த்தன்' என்று அறிந்ததோ அவர்தம் சிந்தையே?                112

பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து,
எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,
சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே.          113

இத்தகை மா நகர், ஈர்-அறு நாளும்,
சித்தம் உறும் களியோடு சிறந்தே,
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.        114

சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.        115

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...