Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் Kamba Ramayanam 13

கோசல நாட்டில் மழை

1
ஐம்பொறி அம்புகள் குற்றம் புரிவதில்லை. மகளிரின் முலை அம்புகள் அறநெறிக்குப் புறம்பாகச் செல்வதில்லை. இப்படிப்பட்ட கோசல நாட்டில் பாயும் ஆற்றின் அழகினைச் சொல்லுவோம்.
2
திருநீறு பூசிய சிவபெருமானின் நிறத்தில் இருந்த வெண்மேகங்கள் இங்குள்ள ஆறுகளை அழகுபடுத்திக்கொண்டு செல்லும். கடலில் மேயும். திருமகளை மார்பில் அணிந்த திருமால் நிறத்தில் மீளும்.
3
மேகம் திரண்டு விரிந்து சென்றது. மேகம் படியும் மலை மேகத்துக்கு மாமன். வெயிலின் கொடுமையால் மலைமாமன் வெப்பம் அடைந்திருக்கிறான். அவனை நீராட்டிக் குளிர்விப்போம் என்று வருவது போல மேகங்கள் வந்தன.
4
புள்ளி வைத்துச் சொல்லக்கூடிய பெருமை உடையது பொன்மலை எனப்  போற்றப்படும் இமயமலை. வானத்து வெள்ளி மீன்கள் தாரையாக ஒழுகுவது போலவும், வள்ளல்கள் தம்மிடம் இருப்பன எல்லாவற்றையும் வழங்குவது போலவும் மழையைக் கொட்டின.
5
மானத்தையும் அறத்தையும் நோக்கி மனு அரசன் போல நீதி தவறாமல் ஆளும் மன்னனின் புகழ் போலவும், ஞானம் முற்றி நான்மறையில் கைதேர்ந்தவர் வழங்கும்  தானம் போலவும் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
தாசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:       1

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்,
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே.      2

பம்பி மேகம் பரந்தது, 'பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றுதும்' என்று, அகன் குன்றின்மேல்,
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.        3

புள்ளி மால் வரை பொன் என நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின - மேகமே.                4

மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது-நீத்தமே.     5

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...