Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் Kamba Ramayanam 14

ஆற்று வெள்ளம் - உருவகம்

6
தலையையும், மார்பையும், கால்களையும் தழுவி, நிலை கொள்ளாமல் ஒருவரிடம் உள்ள செல்வத்தையெல்லாம் கவர்ந்து செல்லும் விலைமாதர் போல வெள்ளம் மலை வளங்களைக் கவர்ந்துகொண்டு ஓடிற்று.
7
மணி, பொன், மயில் பீலி, தந்தம், அகில், சந்தனம் இன்ன பலவற்றை உருட்டிக்கொண்டு ஓடுவதால் ஆறு வணிகர் போல் தோன்றியது.
8
பூ,  பூந்தாது, தேன், பொன்துகள், யானையின் மதநீர் ஆகியவற்றை அடித்துக்கொண்டு ஓடி வருவதால் வெள்ளம் வானவில் போலக் காணப்பட்டது.
9
மலைக் கற்கள், மரங்கள், இலைகள் முதலான அனைத்தையும் ஏந்திக்கொண்டு கவியும் வெள்ளம் கடலுக்கு அணை கட்டச் செல்வது போலத் தோன்றியது.
10
ஈக்களும் வண்டுகளும் மொய்க்குமாறு ஊக்கம் கொண்டு, உள்ளே தெளிவு இல்லாமல், அலையோசை என்னும் ஏப்பம் விட்டுக்கொண்டு, வருவதால், வெள்ளம் ஊற்றும் கள்ளை உண்பவன் போலக் காணப்பட்டது.

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது-அவ் வெள்ளமே.         6

மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தண்
இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
வணிக மாக்களை ஒத்தது-அவ் வாரியே.       7

பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்தது-அவ் வாரியே.        8

மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்-அந் நீத்தமே.           9

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்-
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.           10

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...