Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் Kamba Ramayanam 15

சரயு ஆறு

11
யானை, குதிரைகளை இழுத்துக்கொண்டு வருவதால், அடித்துவரும் மணிகள் கொடிகள் போல் காணப்படுவதால், கடலோடு போராடச் செல்வது போல வெள்ளம் தோன்றியது.
12
சூரிய குலத்தில் தோன்றிய எண்ணில்லாத பல அரசர்கள் போற்றும் புகழினைக் கொண்டதும், தாய் குழந்தைக்குப் பால் சுரக்கும் முலை போல் உலகுக்கு ஊட்டுவதுமான ஆறு சரயு.
13
மலை வாழ் மகளிர் கொடிச்சியர் இடித்த சுண்ணப்பொடி, குங்குமம், கோட்டுக்குழம்பு, ஏலக்காய், சந்தனக்கட்டைத் துண்டுகள், சிந்தூரம், நரந்தம், நாகம், கடுக்கை, ஆர்  வேங்கை கோங்கு மரங்கள், பச்சிலை, கண்டில்-வெண்ணெய், வரைத்தேன்,  அகில் - ஆகியவற்றால் வெள்ளம் மணம் வீசும்.
14
எயிற்றியர் வயிற்றில் அடித்துக்கொள்ளுமாறு மலைமக்கள் எயினரின் அம்புகளை, அடித்துக்கொண்டு வந்தது. வில், அம்புகளையும் அடித்துக்கொண்டு வந்தது. அதனால் அரசன் படையெடுத்துச் செல்வது போலக் காணப்பட்டது.
15
தயிர், பால், வெண்ணெய், நெய் ஆகியவற்றை உரியில் வாரி உண்டான் கண்ணன். குருந்த மரத்தையும் மருத மரத்தையும் சாய்த்தான். ஆயர் மகளிரின் ஆடைகளை வாரிச் சென்றான். கண்ணன் போல வெள்ளம் அவற்றையெல்லாம் அடித்துச் சென்றது.

பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,
புணரிமேல் பொரப் போவதும் போன்றதே.    11

இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.  12

கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே.       13

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட, ஓடி,
அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே.         14

செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறியொடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி,
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...