Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் Kamba Ramayanam 16

உடலில் உயிர் பாய்வது போலச் சரயு ஆறு பாய்ந்தது

16
போர் யானை பகைமன்னர் கதவை முரிக்கும். போராளுகளின் கைகளை வளைத்துப் பிடுங்கும். நெற்றியில் ஓடை அணி திகழ வரும். வண்டுகள் மொய்க்க வரும். கட்டுத்தறியை அறுத்துக்கொண்டு செல்லும். மத யானை இப்படியெல்லாம் செய்வது போல வெள்ளம் மருத நிலத்தைப் பாழாக்கியது.
17
முல்லை நிலத்தைக் குறிஞ்சி நிலமாகவும், மருதத்தைக் முல்லை நிலமாகவும், நெய்தல் நிலத்தை மருத நிலமாகவும், அவற்றில் உள்ள பொருள்கள் எல்லாம் நிலை தடுமாறும்படி செய்துகொண்டு செய்வினை என்னும் விதி ஆட்டிப் படைப்பது போல, சரயு ஆறு பாய்ந்தது.
18
உழவர்களின் வாய்க்கால்களில் ஆற்று வெள்ளம் பிரிந்து ஓடிற்று, கோத்திருந்த மக்கள் குலம் குலமாகப் பிரிந்தது போலப் பிரிந்தது. 
19
மலையில் தோன்றி, இடையில் பிரிந்து, முடிவில் கடலில் கலக்கும் வெள்ளம்  பலப்பல மறைகள் எல்லையில்லாப் பரம்பொருள் ஒன்றையே காண்பது போல ஒரே கடலில் கலந்தது.
20
சோலை, காடு, பொய்கை, மணல், வனம், வயல் - எங்கும் ஆற்றுநீர் ஓடி உடம்பின் எல்லா இடங்கிலும் உயிர் உலாவுவது போலப் பரந்தது.


கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,
நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட,
ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து,
மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே.                16

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே.      17

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே.      18

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.      19

தாது, உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல்-தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே.          20

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...