Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 17

மருதநில வளம்

1
நான்கு அடிகள் கொண்ட பாடல் வகைகளை வகுத்து வால்மீகி என்னும் கவிஞன் தேவர்களின் செவி குளிரப் பாடினான். அவன் புகழ்ந்த கோசல நாட்டை, ஆசை என்னும் கள்ளைக் குடித்துவிட்டு மூக்கறையன் ஒருவன் பேசுவது போல் நான் பாடுகிறேன்.
2
வரப்புகளில் முத்து. மடைகளில் சங்கு. ஈரநிலங்களில் பொன். எருமைக் குழிகளில் கழுநீர்ப் பூக்கள். நீர்க்கரைகளில் பவளம். நெல்வயல்களில் அன்னம். கரும்புத் தோட்டங்களில் தேன்கூடு. சந்தனக் காடுகளில் வண்டுகள்.
3
ஆறு பாயும் ஓசை. உழவர் கரும்பாலையில் ஆரவாரம். பரும்புச்சாறு பாயும் ஓசை. கடலில் சங்கு ஓசை. காளைகள் முட்டிக்கொள்ளும் முனைப்பு. நீரில் எழுமை பாயும் மகிழ்ச்சி. – இப்படிப்பட்டது மருதநிலம்.
4
மருதம் என்னும் அரசவைச் சோலையில் மயில்கள் ஆடின. தாமரை அந்த  ஆட்டத்துக்கு விளக்கு வெளிச்சம். மேகங்களின் இடி அந்த ஆட்டத்துக்கு  முழவு. குவளைப் பூக்கள் ஆட்டத்தைப் பார்ப்பவர்கள். நீரலைகள் ஆட்டத்துக்குத் திரை. வண்டுகளின் ஓசை மகரயாழின் ஓசை.
5
வண்டுகளும், திருமகளும் தாமரையில் இருந்தன. விலைமாதர் கண்களும், காமன் அம்பும் காமுகர்களைத் தாக்கின. முத்தும் பவளமும் (நீர் முத்தும், மின்னலும்) மேகங்களில் இருந்தன. வாக்கில் உண்மையும், புது நூல்களின் பொருளும் மக்கள் நாவில் தோன்றின.

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன்.  1

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்.              2

ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி.        3

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.  4

தாமரைப் படுவ, வண்டும் தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர் கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவ, வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ.            5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...