Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 18

உழவர், உழத்தியர்

6
நீரில் சங்கும், நிழலில் எருமையும், தாமரையில் திருமகளும், புதரில் ஆமையும், நீர்த்துறைகளில் சங்குப் பூச்சிகளும், வைக்கோல் போரில் அன்னப்பறவையும், சோலையில் மயில்களும் உறங்கின.
7
கலப்பை உழும் இடங்களில் பொன் தோன்றியது. சங்குகள் முத்தை உதிர்த்தன.  கால் இடறும் இடங்களில் மணிக்கற்கள் கிடந்தன. நெல்லங்கதிர், மீன், கரும்பு, வண்டு, உழத்தியர் முகம், மலரும் பூக்கள் - எங்கும் ஒளி வீசின.
8
சீறியாழ் மீட்டும் பாணர் நறவம்-கள் உண்டு முழங்கும் இசைக் கருவிகளுடன் பாடினர். வெள்ளை வெளேர் என இருக்கும் மாடங்களில் மயில் ஆடி மக்களைத் துயில் எழுப்பியது.
9
ஆலையில் பிழியும் கருப்பஞ்சாறு என்னும் தேன், பாளையில் இறங்கும் கள்  என்னும் தேன், சோலையில் விழும் பழத்தேன், கட்டு உடைந்து கொட்டும் தேன் கூட்டுத் தேன், மக்கள் அணிந்திருக்கும் மாலைகளிலிருந்து வழியும்  தேன், - எல்லாம் எல்லையில்லாமல் பெருக்கெடுத்து ஓடி வங்கக் கடலில் கலக்க அவற்றை உண்டு மீன்கள் எல்லாம் களிக்கும்.
10
உழத்தியர் வாயிலிருந்து வரும் சொற்கள் பண்கள் போல் இன்பமாக இருக்கும். அவர்களின் கண், கை, கால், முகம், வாய் – போல அவர்கள் களையும் பூக்கள் வயலில் இருக்கும். உழவர் கள் உண்ட வாயை உடையவர். அவர்கள் களைகளைப் பறிக்காமல் நிற்பர். பெண்கள் பால் காதல் கொண்டவர் சிறியோர் ஆயின் அதிலிருந்து அவர்களால் தப்ப முடியுமா?

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை.              6

படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இன மணித் தொகையும், நெல்லின்
மிடை பசுங் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும்,
கடைசியர் முகமும், போதும், -கண்மலர்ந்து ஒளிரும் மாதோ. 7

தெள் விளிச் சீறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி,
வள் விசிக் கருவி பம்ப, வயின்வயின் வழங்கு பாடல்,
வெள்ளி வெண் மாடத்து உம்பர், வெயில் விரி பசும் பொன் பள்ளி,
எள்ள அருங் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே.                8

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ.       9

பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய், ஒக்கும் களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகிலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்?          10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...