Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 19

ஆண்கள் பெண்கள் மகிழ்ந்திருத்தல்

11
புதுப் புனலில் நீராடும் மகளிர் சூடிய பூக்களும், அவர்கள் கூந்தலில் பூசியிருக்கும் நாவி என்னும் கத்தூரியும் கலந்து ஓடிக் கடலை கருமை நிறமாக மாறி மணக்கும் என்றால், தேன் பொழியும் மழலையும், செவ்வாயும்,  வாள் போன்ற கடைக்கண்ணும் கொண்ட மாதர்களின் எண்ணிக்கையையும் அவர்களை அசை கொண்டு நோக்கும் ஆண்களின் எண்ணிக்கையையும் சொல்லவும் வேண்டுமோ?
12
குண்டலம் பூண்ட கோலத்துடன் மைந்தர் நீராடும்போது அவர்கள் பூசிய வெண்ணிறக் கலவைக் குழம்பும், மணக்கும் சந்தனமும், கலந்த நீர் பாய்ந்து சோலையும் மண்ணும் மணப்பதால் வண்டுகள் மொய்க்கும் என்றால் ஆண்களின் எண்ணிக்கையைச் சொல்லவும் வேண்டுமோ?
13
சேல் மீன் போன்ற கண்களுடன் திரியும் மகளிர் போன்று திரியும் அன்னப் பறவையின் குஞ்சுகள் - தாமரைப் படுக்கையில் அன்னம் வளர்க்கும் குஞ்சுகள் - நடக்கும் சேற்றில் எருமைகள் தம் கன்றுகளை நினைத்துச் சொரிந்த பாலை உண்டுகொண்டு பச்சைத் தவளைகள் பாட்டுப் பாடித் தாலாட்டும் பண்ணை வயல்களைக் கொண்டது அந்த நாடு.
14
குயில்களுக்குத் திருமணம். மரக் கிளைகளில் மயில்களின் கூத்தாட்டம். இவை மகளிர் ஆடும் கூத்துப் போல் அழகாகத் தோன்றின. தாமரையில் உறங்கும் அன்னத்தை வண்டுகள் செவ்வழிப் பண் பாடி எழுப்பின. இப்படிப்பட்டது சோலை.
15
மகளிரைத் தழுவியும்,  பருந்து பறக்கும்போது அதன் நிழல் பறப்பது போல இயல் இசை இரண்டையும் துய்த்தும், மருந்து போல் உதவும் சொற்களைக் கேட்டும், விருந்தினர் முகத்தைக் கண்டது போல் விழாக் கொண்டாடியும் மக்கள் பொழுது போக்கினர்.

புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே?      11

வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை, சாற்றின்,
தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,
வண்டல் இட்டு ஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ.  12

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை.       13

குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,
பயில் சிறை அரச அன்னம் பல் மலர்ப் பள்ளிநின்றும்
துயில் எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ-சோலை.  14

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்;        15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...