Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 105

மாவலி தலைமேல் வாமணனின் மூன்றாவது தப்படி

மாவலி தலைமேல் வாமணனின் மூன்றாவது தப்படி
இராமனும் இலக்குவனும் விசுவாமித்திர முனிவர் வேள்வியைக் காத்தல்

வானளாவ உயர்ந்த குறளன் மூன்றாவது தப்படிக்கு மாவலியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டான். 26
மாவலி பிடுங்கிக்கொண்ட இந்தச் சோலையை இந்திரனுக்குக் கொடுத்துவிட்டுத் திருமால் பாற்கடலில் பள்ளிகொள்ளச் சென்றுவிட்டார். அவரது காலடிகளைத் திருமகளின் கைகள் சிவந்து காட்டுகின்றன. 27
இப்படி இந்திரன் பெற்ற இந்தச் சோலைதான் வேள்வி செய்வதற்கு ஏற்ற இடமாகும் என்று விசுவாமித்திரர் இராமனிடம் கூறினார். 28
இராமன் இலக்குவன் இருவரையும் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு அந்தச் சோலையில் விசுவாமித்திரர் வேள்வி செய்யலானார். 29
கண்ணைக் காக்கும் இமை போல இராமனும் இலக்குவனும் வேள்வியை ஆறு நாள் காத்தனர். 30

'உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே!         26

'"உரியது இந்திரற்கு இது" என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! 27
  
'ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே.         28

'ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான்' எனா,
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின்
வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
காண்தகு குமரரைக் காவல் ஏவியே.   29

எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்.       30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...