Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 113

யமுனை ஆறைக் கடந்து  கங்கை ஆற்றை அடைதல்
மணி ஆரமாகவும், சந்தனம், அகில் ஆகியவை முலைப் பூணாகவும், வஞ்சி மலர்கள் மேகலையாகவும், ஆற்றுமணல் படிவு கூந்தலாகவும், நீர் பாயும் வாய்க்கால்கள் ஒலிக்கும் சிலம்பாகவும் கொண்டு விளங்கும் சோணை என்னும் யமுனை ஆற்றை இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் ஆகிய மூவரும் கண்டனர்.  1
கதிரவன் அவர்களுக்குக் குளுமை செய்பவன் போல மேலைக் கடலில் மறைந்தான். 2
தாமரை என்னும் கோயில் தன் இதழ் வாயில்களை அடைத்துக்கொண்டது. அவர்கள் அந்த ஆற்றுநிலத்தைக் கடந்து ஒரு சோலையை அடைந்தனர். 3
திருமாலின் உந்தியில் பிரமன் தோன்றியது போல தாமரை மலரக் கதிரவன் முளைத்தான். 4
அங்கிருந்து சென்ற அவர்கள் கங்கை சூடிய சிவன் தலையில் கொன்றை பூத்திருப்பது போல் தோன்றும் காவிரி ஆறு போல் தோன்றும் கங்கை ஆற்றைக் கண்டனர். 5

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார்.    1

நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான்.          2

கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப,
பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார்.         3

காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்
நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். 4

அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார்.             5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...