![]() |
அகலிகை |
![]() |
அகலிகை |
மங்கையர் அரங்கினில் ஆடுவர். யாழும் முழவும் முழங்கும். இதனைக் கேட்டுப் பயந்து வாளைமீன் கமுகம்பாளை வரை எழும்பித் துள்ளிக் குதிக்கும். 11
மகளிரும், பறவைகளும் நீரில் குளிப்பர். அப்போது கடலைக் கடைவது போல நீர் அலைமோதும். மலர்களை வண்டினம் குடையும். 12
இப்படிப்பட்ட மிதிலை நாட்டின் மதிலுக்கு வெளியில் கருங்கல் மேட்டுப் பரப்பு ஒன்றினை மூவரும் கண்டனர். 13
இராமன் நடந்து சென்ற புழுதி அங்கிருந்த கல்லில் பட முனிவன் சாபத்தால் கல்லாய்க் கிடந்த அகலிகை தன் பண்டைய வடிவம் பெற்று எழுந்து நின்றாள். 14
அந்தப் பெண் மின்னல் போல் ஒதுங்கி நின்றாள். விசுவாமித்திரன் அவள் யார் என்று கூறலானான். வான்கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டுவந்தவன் மரபில் வந்த மைந்தனே! (இராமன்) தேவர் கோமான் இந்திரனுக்கு உடம்பில் ஆயிரம் கண்கள் தோன்றும்படியும், இவள் கல்லாகும்படியும் கோதம முனிவன் சாபம் தரக் கல்லாகி நின்றவள் இவள் என்று விசுவாமித்திரன் கூறினான். 15
இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. 11
படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார்
குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள். 12
இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். 13
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14
'மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்' என்றான். 15
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment