![]() |
கோதமன் சாபம் |
முனிவன் கூறக் கேட்ட இராமன் “என் ஐயனே! இவள் இவ்வாறு கல்லாகக் கிடந்தது இவளது ஊழ்வினையினாலோ, அல்லது இடையில் நேர்ந்ததோ” என வினவினான். 16
முனிவன் கூறுகிறான். குலிசப்படை படை கொண்ட இந்திரன், அகலகையின் கணவனாகிய முனிவன் இல்லாதபோது மான் போல் மருண்டு நோக்கும் அகலிகையின் முலையை விரும்பினான். 17
அகலிகையின் கண் வேலும், மனமதன் அம்பும் இந்திரனைத் தாக்கின. ஒருநாள் முனிவனை வெளியில் செல்லுமாறு செய்தான். முனிவன் உருவத்தோடு அகலிகை முன் தோன்றினான். 18
அகலிகையை அவள் கணவன் உருவில் தழுவினான். அகலிகை முனிவன் என்று எண்ணித் தடுப்பது தக்கது அன்று என்று எண்ணி அவன் இன்பம் துய்க்கத் தாழ்ந்து கிடந்தாள். அப்போது முக்கண் சிவன் போன்ற முனிவன் அங்கு வந்துவிட்டான். 19
முனிவனைக் கண்ட அகலிகை நடுக்கத்துடன் நின்றாள். இந்திரன் பூனை வடிவம் கொண்டு நழுவினான். 20
பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன்,
'என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ ?
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக!' என்றான் 16
அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
'செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்; 17
'தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான். 18
'புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
'தக்கது அன்று' என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான். 19
'சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான். 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment