![]() |
இராமன் அகலிகையை வாழ்த்தல் |
கோதம முனிவன் இந்திரனைச் சினந்து நோக்கினான். “உன் உடம்பெல்லாம் பெண்-குறிக்-கண்கள் ஆயிரம் தோன்றட்டும்” என்று சாபமிட்டான். அவ்வாறே அவன் உடம்பு ஆயிற்று. 21
இந்திரன் போன பின்னர் “கல் ஆகுக” என்று அகலிகையைக் கோதமர் சபித்தார். அவள் முனிவர் காலடியில் வீழ்ந்தாள். 22
பிழைத்து பொறுத்தல் வேண்டும். இதற்கு முடிவு அருள வேண்டும் - என்று அகலிகை முனிவனை வேண்டினாள். தசரத-இராமன் கால்-புழுதி பட்டு இந்தக் கல்-உருவம் நீங்குக – என்று முனிவர் அருளினார். 23
இவ்வாறு அகலிகை வரலாற்றை இராமனுக்குக் கூறிய விசுவாமித்திரர் “தாடகையைக் கொன்றபோது உன் கைவண்ணத்தைக் கண்டேன். இப்போது கல்லைப் பெண்ணாக்கியபோது உன் கால்வண்ணத்தை இங்குக் கண்டேன்” என்று கூறி இராமனைப் புகழ்ந்தார். 24
“இனி முனிவன் அருள் உண்டாகுமாறு நடந்துகொள்” என்று அகலிகையிடம் இராமன் கூறினான். அவளும் இராமனை வணங்கிவிட்டுச் சென்றாள். 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி (திருக்குறள்)
'தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய
தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக" என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன, இமைப்பின் முன்னம் 21
'எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள். 22
'"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!" என்ன,
"தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி" என்றான். 23
'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.' 24
தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
'மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
போது நீ, அன்னை!' என்ன பொன் அடி வணங்கி போனாள். 25
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment