Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 121

இந்திரன் செல்வம் கடலில் மூழ்கியது

திருமகள் மாலையை அலட்சியம் செய்த இந்திரனை முனிவர் சபித்தார். உன் வானுலகம் சாம்பலாகட்டும் என்றார். திசை இருண்டது. உலகமே சுழன்றது. 3-11
முனிவன் விழிகளில் புகை எழுந்தது. சதமகனே (இந்திரனே) கேள், என்று முனிவர் வெகுண்டு கூறலானார். 3-12
திருமால் மார்பில் வீற்றிருக்கும் திருமகள் மாலை இது. இதனைப் பெற்ற காசிபன் மனைவி என் தவ வலிமை கண்டு எனக்குத் தந்தாள். 3-13
இன்று உன்னைக் கண்ட மகிழ்ச்சியில் மாலையை உனக்கு வழங்கினேன். நீ இகழ்ந்தாய். அதனால், உன் செல்வமும், பிற வளங்களும் கடலில் மூழ்கட்டும். நீ உன் புகழ் குன்றித் துன்புறுவாயாக – என்றார். 3-14
அரமடந்தையர், கற்பகம், நவநிதி, அமிர்தம், காமதேனு, குதிரை, யானை முதலான அனைத்தும் கடலில் மூழ்கின. 3-15
அப்போது மனம் நொந்த இந்திரன் முனிவனை வேண்டினான். திருமால் அருளால் உன் செல்வத்தைப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். 3-16

'"கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால்,
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்" என்று, அழியா,
விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும்.            3-11

'புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்;
சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப,
"மிகை எழுந்திடு சதமக! கேள்" என வெகுண்டான்.               3-12

'"பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு இல்
வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால்.    3-13

'"இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப,
குன்றி, நீ துயர் உறுக" என உரைத்தனன், கொதித்தே.         3-14

'அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம்,
சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின்.             3-15

'அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து,
வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த,
"நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால், நயக்க
முந்தும்" என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான்.               3-16

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...