Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 123

மோகினி

பாற்கடலைக் கடைதல்
மோகினி

மந்தர மலையைப் பிடுங்கி நிறுத்தினர். வாசுகி பாம்பைக் கயிறாகச் சுற்றினர். நிலாவை நிறுத்தினர். ஆமையை மத்தாக்கினர். பாற்கடலைக் கடைந்தனர். பூமியைச் சுமக்கும் அனந்தன் என்னும் பாம்பே நெளிந்தான். 3-21
ஆமை முதுகில் மந்தரம் வைக்கப்பட்டது. முனிவன் சாபத்தால் கடல் புக்க இந்திரன் செல்வம் வெளிப்பட வேண்டும் என்று ஆயிரக் கணக்கான கைகள் இழுத்துக் கடைந்தன. 3-22
அமிழ்தம் வெளிப்பட்டது. திருமால் மோகினி வடிவில் தோன்றினார். அசுரர்கள் மோகினியையே பார்த்துக்கொண்டிருந்தனர். அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டனர். 3-23
கடையும்போது வெளிப்பட்ட நஞ்சினையும், பிறைநிலாவையும் சிவனுக்குத் திருமால் அளித்தார். கற்பக மரம் முதலானவற்றை இந்திரனுக்கு அளித்தார். திருமகளையும், முத்தாரத்தையும் திருமால் எடுத்துக்கொண்டார். 3-24
அந்த நேரத்தில் திதி என்பவள் காசிபனை வணங்கி என் மகன் இந்திரன் முதலானோர் புணர்ச்சியால் இறந்துபோயினர். நீ எனக்கு ஒரு மகனைத் தா என்று வேண்டினாள். 3-25

'மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான்.              3-21

'திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப,
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே,
அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான்.      3-22

'இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால்,
பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க,
சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார்.       3-23

'வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி,
திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி,            3-24

'அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள்,
வந்து காசிபன் மலரடி வணங்கி, "என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு" என்றாள். 3-25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...