Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 128

கங்கை

பிரமன் பகிரதன் முன் தோன்றினான். முனிவன் சினத்தால் மாண்ட உன் முன்னோர் நரகம் செல்லாமல் இருக்கவேண்டுமானால் வானுலகில் ஓடும் கங்கை ஆறு உன் முன்னோரின் எலும்புகளின் மீது பாயவேண்டும் என்று பிரமன் கூறினான். 5-16
கங்கை ஆறு மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தை முக்கண் சிவனைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. எனவே சிவனை நோக்கித் தவம் செய்க என்றும் கூறினார். 5-17
பகிரதன் சிவனை நோக்கி முன்போலவே 10,000 ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி உன் கருத்தினை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார். பகிரதன் கங்கையை நோக்கி 5,000 ஆண்டுகள் தவம் செய்தான்.  5-18
கங்கை பகிரதன் முன் தோன்றினாள். நான் மண்ணுலகுக்கு வந்தால் என் வேகத்தை யார் தாங்க முடியும். தாங்குவேன் என்று சிவன் சொன்னது வியப்பாக உள்ளது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 5-19
கரந்தை, ஊமத்தம், எருக்கு, கூவிளை, கடுக்கை(கொன்றை) மலர்களைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் சிவனை நோக்கி, மீண்டும் இரண்டரை ஆண்டு பகிரதன் தவம் செய்தான். 5-20

'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான்.        5-16

'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான்.               5-17

'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான்.              5-18

'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள்.                5-19

'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...