Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 130

கங்கைக்குப் பகிரதி, சானவி பெயர்கள்

அகத்தியன் தன் வேள்வியை அழித்த கங்கை ஆற்று நீர் முழுவதையும் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். பகிரதன் தான் அரும்பாடு பட்டுக் கங்கையைக் கொண்டுவந்த நோக்கத்தை முனிவனிடம் கூறினான். நிலைமை உணர்ந்த முனிவன் கங்கையைத் தன் காது வழியாக வெளியிட்டான். அது பகிரதன் முன்னோரின் சாம்பலில் பாய்ந்தது. 2-26
சகரர்கள் நரகம் செல்லாமல் வானுலகம் சென்றனர். வானவர் மலர்மழை பொழிந்தனர். முரசு முழக்கி சகரரை வரவேற்றனர். பகிரதன் தன் அரண்மனைக்கு மீண்டான். 2-27
இப்படி வானுலகக் கங்கை பகிரதன் தவத்தால் மண்ணுலகம் வந்தது என்று விசுவாமித்திரன் இராமனுக்கு எடுத்துரைத்தான். 5-28
சகரர் பொருட்டுப் பகிரதன் கொண்டுவந்ததால் “பகிரதி” என்றும், சன்னு முனிவன் செவியின் வழி வெளிப்பட்டதால் “சானவி” என்றும் கங்கை ஆற்றுக்குப் பெயர் உண்டாயிற்று. 5-29
இந்தச் செய்திகளை வியப்போடு இராமனும், இலக்குவனும் கேட்டு முனிவனை வணங்கினர். பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்றனர். 5-30

'உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப,
கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
"கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து,
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே.          5-26

'நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான்  5-27

'அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த!           5-28

'சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி,
பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி" ஆகி,
மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம்'.  5-29

என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா,         5-30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...