Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 21

உழவர், அந்தணர் உணவு

21
விளைவயல், பொழில், பழுத்த மரங்கள், முல்லை நிலத்துத் துவரை, பதியக் கொடியின் காய்கள், - ஆகியவற்றை மலரிலுள்ள தேனைக் கொண்டு செல்லும் வண்டுகள் போல உழவர்கள் கொண்டுவருவர்.
22
முக்கனி, முல்லை நிலத்துத் துவரம்பருப்பு, நெய், தயிர், பாயசம், இவற்றுடன் சோறு ஆகியவற்றை அந்தணர் இல்லத்தில் விருந்தமுதாக எங்கும் உண்ணும் ஆரவாரம் மிக்கது, கோசல நாடு.
23
வண்டுகள் பருவ மங்கையரின் கண்களை வண்டு என நினைத்துக் காமுறுமாறு மருத நில வேலிநிலம் காணப்பட்டது.
24
காமனை வென்ற உழத்தியர் முலைகள், எதிர் நோக்கி நின்று, ஆண்கள் மீது சினம் கொண்டு நின்றன. மற்றொரு பக்கம் பாளையில் ஒழுகும் கள்ளைப் பருகிவிட்டு வாளை மீன்கள் மதமதப்புடன் திரிந்தன.
25
ஈர நீரில் கிடக்கும் எருமைகள் நிலத்தில் கிடக்கும் கார்மேகங்கள் போலக் காணப்பட்டன. அந்த எருமைகள் ஊரில் இருக்கும் தம் கன்றுகளை நினைத்து நிலத்தில் சொரிந்த முலைப் பால் உண்டு நெல்லம்பயிர்கள் செழித்து வளர்ந்தன.

கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,-
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-மள்ளர், கொள்வார்.                21

முந்து முக் கனியின், நாணா முதிரையின், முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம், இடை இடை செறிந்த சோற்றின்,
தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும்.             22

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை, 'ஒண் பெடை ஆம்' எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ.      23

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஒர் பால்;
பாளை தந்த மதுப் பருகி, பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்.    24

ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட; மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே.  25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...