Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 37

அயோத்தியில் பந்தாட்டம் முதலியன

41
அயோத்தி பொன்மாளிகைகளில் மகளிர் தம் கூந்தலுக்கு அகில் புகை ஊட்டுவர். அது போய் மேகத்தோடு சேரும். மேகம் கடலில் நீர் முகக்கும்போது அகில் புகை மணம் கடலிலும் வீசும்.
42
குழல், யாழ், மழலை, இன்சொல், பொருநர் இசை – இவை உழவர் சேரியில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
43
சினம் கொண்ட யானை காலால் பறித்த பள்ளங்களை மகளிர் உதிர்க்கும் சுண்ணப்பொடி தூர்க்கும்.
44
மகளிர் பந்தாடுவர். அப்போது சிந்தும் முத்துக்களை அவர்களின் தோழியர் பொறுக்கிக் கோத்துத் தருவர்.
45
மகளிர் அரங்கில் நடனம் ஆடுவர். அவர்களின் கண்கள் காண்பவர் நெஞ்சை உருக்கும். மகளிர் இடை தேய்வது போல அவர்களைப் பார்ப்பவர் உயிர் தேயும்.

ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ?      41

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.            42

கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ; வாட் கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;  
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.       43

பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா.         44

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன; வளர்வது, ஆசையே.  45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...