![]() |
கலைக்கோட்டு முனிவர் |
யார்யார் யார்யாராக வரவேண்டும் என்று திருமால் கூறினாரோ, எப்படி வருவேன் என்று தானே முன்வந்து பிறர் கூறினார்களோ, அப்படியே அவர்கள் மண்ணுலகுக்கு வந்தார்கள். 26
இப்படி வந்த செய்தியை எண்ணிப்பார்த்த வசிட்ட முனிவர் “புதல்வரைப் பெறும் வேள்வி செய்க” என்று தயரதனுக்குக் கூறினார். 27
அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று தயரதன் வினவினான். 28
தேவர்களையும், மக்களையும் பெற்றெடுத்தவன் காசிபன். அவன் மகன் விபாடகன் (கலைக்கோட்டு முனிவன்) 29
கலை, நெறி முதலாவற்றில் இவன் பிரமனுக்கு ஒப்பானவன். கலைமான் முகம் கொண்டவன். அவன் வந்து வேள்வி செய்ய வேண்டும் – என்று வசிட்டன் கூறினான். 30
அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர் உளோனும்,
இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று புக்கார். 26
ஈது, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்' என்றான். 27
என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ ?
அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி' என்றான் 28
'மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும் எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த மைந்தன், 29
'வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும். 30
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment