Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 56

கலைக்கோட்டு முனிவன் ஊருக்கு வருதல்

இப்படிப் பலநாள் கலைக்கோட்டு முனிவன் வந்துபோனான். பின்னர் அந்தப் பெண்கள் தங்கள் ஊரிலுள்ள இருப்பிடத்துக்கும் வரவேண்டும் என வேண்டினர். முனிவன் ஒப்பி அவர்களின் பின் சென்றான். 41
அழகியர் மகிழ்ந்தனர். முனிவன் அவர்களைப் பின் தொடர்ந்தான். 42
முனிவன் நகருக்கு வருவதற்கு முன்னர் நாட்டில் நல்லமழை பெய்து குளங்கள் நிறம்பின. 43
ஆற்றில் வெள்ளம் வந்து நெல்லும் கரும்பும் செழித்தன. இதனால் அரசன் முனிவர் வருகையை உணர்ந்துகொண்டான். 44
காமம், வெகுளி, களிப்பு மூன்றும் நீக்கிய முனிவன் மகளிர் சூழ்ச்சியால் வருகிறான் போலும் என்று மன்னன் கருதினான்.

'இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
தன்னை, "எம் இடத்தினும், சார்தல் வேண்டும்" என்று,
அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான்.            41

'விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
"அம்ம! ஈது, இது" என, அகலும் நீள் நெறி,
செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
தம் மனம் என மருள் தையலார்களே.               42

'வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே.        43

'பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன்.                44

"காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த அக்
கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?"             45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...