![]() |
கலைக்கோட்டு முனிவர் திருமணம் போடிநாய்பனூர் கோயில் ஓவியம் |
உரோமபதன் தன் நகரை அலங்கரித்தான். முனிவரை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குள் சென்றான். அது பொன்னாலான இருப்பிடம். அங்கு அமைக்கப்பட்டிருந்த அரியணையில் கலைக்கோட்டு முனிவரை அமரச் செய்தான். 51
பூசனை முதலான கடமைகளைச் செய்தான். தன் மகள் சாந்தை என்பவளை இருக்கு வேத முறைப்படித் திருமணம் செய்து கொடுத்தான். 52
மழைவளம் சுரக்க நாட்டில் வறுமை நீங்கிய உரோமபதன் மாநகரில் கலைக்கோட்டு முனிவர் இருக்கிறார், என்று தயரதனுக்கு வசிட்டர் கூறினார். 53
இதனைக் கேட்ட தயரதன் கலைக்கோட்டு முனிவரை அழைத்துவரத் தேரில் புறப்பட்டான். அமைச்சர் சுமந்திரன், முடிமன்னர்கள் முதலானோர் தயரதனை வாழ்த்தினர். 54
பல்லியம் முழங்க, மாகதர், வேதியர், மகளிர் முதலானோர் வாழ்த்திப் பல்லாண்டு கூற, கடல் போன்ற படையுடன் தயரதன் உரோமபதன் நாட்டை அடைந்தான். 55
'அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியொடும் வேந்தன்; கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன். 51
'அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன். 52
'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச!' என்றனன். 53
என்றலுமே,முனிவரன்தன் அடிஇறைஞ்சி,'ஈண்டு ஏகிக் கொணர்வென்'என்னா,
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர் ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
'இன்று எமது வினை முடிந்தது' எனச் சொரிந்தார் மலர் மாரி, இடைவிடாமல். 54
காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க, கானம் பாட,
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை சூழ, சுடரோன் என்ன
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே 55
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment