Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் - பாயிரம் Kamba Ramayanam 6

தனியன்
பிறர் பாடியது

11
காண்டம் 7, கதைகள் 1800, சமரம் 10, படலம் 128, விருத்தம் 12,016, விருத்த வேறுபாட்டு வண்ணம் 96 – என்று கணக்கிட்ட வகையில் கம்பன் பாடினான்.
12
தமிழில் உள்ள குற்றங்களை இராமாயணம் என்னும் அரம் அராவுகிறது.
13
எல்லாச் செல்வமும் இவ்வுலகில் பெற்றிருந்தாலும், தேவர் உலகக் கற்பக மரநிழலில் இருந்தாலும், அவை கம்பன் கவிதை போல் கற்றவர்க்கு இன்பம் தராமாட்டா.
14
இராமகாதையை நாரதன் கருப்பஞ்சாறு போல் சொன்னான். வான்மீகி அதனைப் வெல்லப்பாகு போல் எழுதினான். போதன் அதனை வெல்ல அச்சு ஆக்கினான். காளிதாசன் அதனைப் பஞ்சாமிர்தம் ஆக்கினான். கம்பன் அதனை விளைச்சல் வருவாயாக வழங்கினான்.
15
’ராம’ என்னும் இரண்டு எழுத்து, நாள்தோறும் நன்மையையும் செல்வத்தையும் நல்கும். அதனால் தீமையும், பாவமும் சிதைந்து தேயும். பிறப்பு இறப்பு இல்லாமல் வீடுபேறு அளிக்கும்.

கரை செறி காண்டம் ஏழு, கதைகள் ஆயிரத்து எண்ணூறு,
பரவுறு சமரம் பத்து, படலம் நூற்றிருபத் தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒருபத்தாறு;
வரம்மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே.    11

தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே - இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி.         12 (வெண்பா)

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி, அரசு ஆண்டு இருந்தாலும்,
உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நீழல் இருந்தாலும்,
செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில்,
கம்பநாடன் கவிதையில்போல், கற்றோர்க்கு இதயம் களியாதே.          13

நாரதன் கருப்பஞ் சாறாய், நல்ல வான்மீகன் பாகாய்,
சீர் அணி போதன் வட்டாய், செய்தனன்; காளிதாசன்,
பார் அமுது அருந்தப் பஞ்சதாரையாய்ச் செய்தான்; கம்பன்,
வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே.  14

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால்.  15

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...