Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 60

கலைக்கோட்டு முனிவர் தன் மனைவியுடன் அயோத்தி செல்லல்

தயரதன் சென்றபின்னர் உரோமபதன் வேதமே உருவம் கொண்டது போல விளங்கும் கலைக்கோட்டு முனிவன் இருப்பிடத்துக்குச் சென்றான். இங்கு வந்த காரணம் என்ன என்று முனிவன் வினவினான். 61
புறாவுக்காகத் துலாக்கோலில் தன்னையே கழுகுக்கு அளித்தவன் மனுநீதிச் சோழன். (கம்பனின் தமிழக நினைவு) அவனைப்போல் அறம் செய்பவன் தயரதன். அவன் ஊர் அயோத்திக்கு நீங்கள் சென்று மீளவேண்டும் என்று அம் மன்னன் விரும்புகிறான் என்றான் உரோமபதன். 62
சென்றுவரும் வரம் உமக்கு அளித்தோம்; தேர் கொணர்க என்றார், முனிவர். உரோமபதன் தேரைக் கொண்டுவந்து நிறுத்தி, மனைவியோடும் சென்றுவருக என்று வேண்டிக்கொண்டான். 63
மன்னன் முனிவரை வணங்கினான். விதியின் வலிமைமையை எண்ணிக்கொண்டே முனிவரும் மனைவியும் தேரில் ஏறினர். 64
அறமும், தேவரும் முனிவருக்கு மலர்மாரி பொழிந்தனர். 65

மன்னர்பிரான் அகன்றதன்பின்,வயவேந்தன்,அருமறைநூல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி,அடிஇணைத்தாமரைகள் அம்பொன்
மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட, 'இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?' என, 'அடியேற்கு ஓர் வரம் அருளும்; அடிகள்!' என, 'யாவது?' என்றான்.   61

'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன்ஒன்றும் திருமனத்தான்,அமரர்களுக்கு இடர்இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடிவேலான்,"தசரதன்" என்று,உயர்கீர்த்திச் செங்கோல்வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து, இவண் நீ மீள்தல்!' என்றான்.             62

'அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி' என, அருந் தவத்தோன் அறைதலோடும்,
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன், அடி இறைஞ்சி, 'வேந்தர்வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்' என்று, அதிர் குரல் தேர் கொணர்ந்து, 'இதனில், கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!' என, ஏறிச் சிறந்தான் மன்னோ.           63

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார். 64

அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
'வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்' என்று எண்ணியே.          65

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...