Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 61

தயரதன் மகிழ்வுடன் முனிவனை எதிர்கொள்ளல்

முனிவர் வரவு பற்றித் தூதுவர்கள் தயரதனுக்குக் கூறினர். தயரதன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். 66
முனிவரை வரவேற்கத் தயரதன் தேரில் ஏறி இசை முழங்கப் புறப்பட்டான். 67
இரண்டு யோசனை தூரம் எதிர் சென்று முனிவரைத் தயரதன் கண்டான். 68
மனைவியுடன் மரவுரி தரித்த முனிவனைக் கண்டான். 69
குண்டிகை, குடை, தண்டு ஆகியவற்றுடன் முனிவர் காணப்பட்டார். 70

தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
ஓதினர், முனி வரவு; ஓத, வேந்தனும்,
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன்.     66

எழுந்தனன் பொருக்கென, இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை, வேரினோடுமே.               67

'பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்' என்று கொண்டு,
அதிர்ந்து எழு முரசுடை அரசர் கோமகன்
முதிர்ந்த மா தவமுடை முனியை, கண்களால்
எதிர்ந்தனன், ஓசனை இரண்டொடு ஒன்றினே.        68

நல் தவம் அனைத்தும், ஓர் நவை இலா உருப்
பெற்று, இவண் அடைந்தெனப் பிறங்குவான் தனை,
சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,
முற்று உறப் பொலிதரு மூர்த்தியான் தனை,             69

அண்டர்கள் துயரமும், அரக்கர் ஆற்றலும்,
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை,
குண்டிகை, குடையொடும், குலவு நூல் முறைத்
தண்டொடும், பொலிதரு தடக் கையான் தனை,       70

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...