![]() |
கலைக்கோட்டு முனிவரும், வசிட்டரும் வேள்வி செய்தல் |
யாகம் செய்வதற்கு வேண்டிய கருவிகள் எல்லாவற்றையும் கொண்டுவந்தனர். தயரதனை நிருபர்கள் பாராட்டினர். நீராடிய பின்னர் தயரதன் வேத முறைப்படி யாகசாலைக்கு வந்தான். 81
நாள்தோறும் மூன்று வேளை வேள்வி ஆறு மாதம் நடைபெற்றது. வானவர் துந்துமி முழக்கினர். 82
பின்னர் கலைக்கோட்டு முனிவன் மகனைப் பெறவைக்கும் வேள்வி செய்தான். 83
பொன் தட்டில் வெண்ணிறப் பிண்டம் ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு தீயிலிருந்து சிவந்த கண் கொண்ட பூதம் ஒன்று வந்தது. 84
அந்தப் பிண்டத்தை அது தரையில் வைத்தது. முனிவன் அதனைத் தயரதனிடம் கொடுத்து மனைவிமாருக்கு வழங்குமாறு கூறினான். 85
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்,
தூய நல் புனல் படீஇ, சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன். 81
முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதி
வழங்கியே, ஈர்-அறு திங்கள் வாய்த்த பின்,
தழங்கின துந்துமி; தா இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர், வெளி இன்று என்னவே. 82
முகமலர் ஒளிதர மொய்த்து, வான் உளோர்,
அக விரை நறு மலர் தூவி, ஆர்த்து எழ,
தகவுடை முனியும், அத் தழலின் நாப்பணே,
மக அருள் ஆகுதி வழங்கினான் அரோ. 83
ஆயிடை, கனலின் நின்று, அம் பொன் தட்டினில்
தூய நல் சுதை, நிகர் பிண்டம் ஒன்று, - சூழ்
தீ எரிப் பங்கியும், சிவந்த கண்ணும் ஆய்,
ஏயென, பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. 84
வைத்தது தரைமிசை, மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும், வேந்தனை,
'உய்த்த நல் அமுதினை, உரிய மாதர்கட்கு,
அத் தகு மரபில்நின்று, அளித்தியால்' என்றான். 85
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment