Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - கையடைப் படலம் Kamba Ramayanam 78

தயரதனும் விசுவாமித்திரனும் ஒருவரை ஒருவர் புகழ்தல்

தயரதன் விசுவாமித்திரரை இருக்கையில் அமரச்செய்தான். “இன்றே என் வினைத்தொடர் நீங்கிற்று” என்று சொல்லி முனிவரைப் போற்றினான். 6
“தாங்கள் வரும் அளவுக்கு இந்த நிலம் தவம் செய்ததா என்றால் இல்லை. நான் நன்மை செய்திருக்கிறேனா என்றால் இல்லை. என் குலம் செய்த தவத்தால் தங்களை வணங்கும் பேறு பெற்றேன்” என்று கூறினான். 7
என்னைப் போன்ற முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஏதேனும் துன்பம் வந்தால், சிவன் இருக்கும் பனிமலையும், திருமால் இருக்கும் பாற்கடலும், பிரமன் இருக்கும் தாமரை-பீடமும், கற்பக நாட்டில் இருக்கும் அயோத்தியும் அல்லாமல் வேறு புகலிடம் உண்டோ என்று முனிவன் தயரதனைப் பாராட்டினான். 8
இந்திரனுக்குத் தீங்கிழைத்த சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து அளித்த அரசை அன்றோ இந்திரன் ஆண்டுகொண்டிருக்கிறான் என்று கூறித் தயரதனை விசுவாமித்திரர் பாராட்டினார். 9
முனிவன் புகழ்ச்சியில் மயங்கிய தயரதன் “அரசு எய்தி இருப்பதன் பயன் யாது? நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான். 10

பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி,
இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, 'இன்றே
துணிந்தது, என் வினைத் தொடர்' எனத் தொழுது சொல்லும்:     6

'நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ, யான்
வலம் செய்து வணங்க, எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம்' என்று இனிது கூற, முனி கூறும்:            7

'என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்,
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து
அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல் கடந்த புலவு வேலோய்!    8

'இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து,
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி,
குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?-அரச!' என்றான்.       9

உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று,
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே:       10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...