Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - கையடைப் படலம் Kamba Ramayanam 79

வேள்வி காக்க இராமனைத் தருக

“வனத்தில் நான் செய்யும் வேள்விக்கு அரக்கர் இடையூறு செய்யாமல் காப்பதற்காக உன் மக்கள் நால்வரில் கரிய செம்மலாகிய இராமனைத் தரவேண்டும்” என்று, தயரதனின் உயிரைக் கேட்பவர் போல விசுவாமித்திரர் கூறினார். 11
விசுவாமித்திரன் கூறிய இந்தச் சொற்கள் நெஞ்சில் வேல் பாய்ந்த புண்ணில் தீயைப் பாய்ச்சுவது போலத் தயரதன் காதுகளில் புகுந்தது. அந்தத் துன்பத்தில் அவன் உயிர் ஊசலாடியது. கண் இல்லாத ஒருவன் கண்ணைப் பெற்று அந்தப் பார்வையை மீண்டும் இழந்துவிட்டது போல் ஆயிற்று. 12
பின்னர் ஒருவாறு துயரத்திலிருந்து விடுபட்டு, “பெரியோய்! இராமன் சிறியவன். படைத்திறம் இல்லாதவன். செய்யவேண்டிய பணி இதுவானால், சிவன், புரந்தரன், பிரமன் ஆகியோரும் சேர்ந்துகொண்டு செய்யும் இடையூறு நேராவண்ணம் நான் காவல் காக்கின்றேன். வேள்வி செய்ய எழுந்தருள்க” எனத் தசரதன் கூறினான். 13
என்றதும் முனிவன் சினத்தோடும் எழுந்தான். இது தயரதனுக்கு இறுதிக்காலம் என்றும், இல்லை என்றும் தேவர்கள் பேசிக்கொண்டனர். வெயில் ஓடி ஒளிந்துகொண்டது. முனிவனின் விழிகள் அங்குமிங்கும் ஓடின. செங்கண் சிரித்தது. 14
சினம் கொண்ட முனிவனின் கருத்தினை வசிட்டன் நினைத்துப்பார்த்தான். தயரதனுக்குக் கூறலானான். “உன் மகனுக்கு உறுதி வரவேண்டிய நாள் வந்துள்ளது. இதனை நீ மறுக்கலாமா” என்றான். 15

'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.     11

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட,
'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான் கடுந் துயரம்-காலவேலான்.              12

தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி,
'படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு வேள்விக்கு எழுக!' என்றான்.             13

என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண் படைத்த முனி; 'இறுதிக் காலம்
அன்று' என, 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.         14

கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ
பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?' எனா, வசிட்டன் கூறுவான்:    15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...