Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - கையடைப் படலம் Kamba Ramayanam 80

இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

வசிட்டன் தயரதனுக்குக் கூறுகிறான். “ஐய! உன் மகனுக்கு அளவில்லாப் போர்க்கலைத் திறம் வந்து சேரும் நாள் வந்துள்ளது, என்றான். 16
குருவின் சொல்லைத் தட்டாமல், தயரதன் இராமனை அழைத்துவருமாறு கூறினான். இராமன் வந்தான். 17
வந்த இராமனை அவன் தம்பி இலக்குவனோடும் சேர்த்துக் காட்டி, “இனி இவர்களுக்குத் தந்தையும் நீ, தாயும் நீ. இவர்களை தந்தேன். பொருத்தமானதைச் செய்க” என்று தயரதன் கூறினான். 18
தயரதன் கொடுத்த மைந்தரை வாங்கிக்கொண்ட விசுவாமித்திரன் அடுத்த வேள்வி செய்யப் புறப்பட்டான். 19
வில், அம்பறாத்தூணி, வாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு இராமனும் இலக்குவனும் முனிவரைப் பின்தொடர்ந்தனர். 20

'பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது' என்னவே,     16

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,-
'வருக என்றனன்' என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான்.          17

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான்.      18

கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, 'மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்' எனா,
நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான்.         19

வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்.  20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...