Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - கையடைப் படலம் Kamba Ramayanam 81

விசுவாமித்திரனின் நிழல் போல இராமனும் இலக்குவனும் பின்தொடர்ந்து சென்றனர்.

அண்ணனும் தம்பியும் விசுவாமித்திரன் பின் அவனது நிழல்போல் தயரதன் உயிர் செல்வது போலச் சென்று அயோத்தி மதிலைக் கடந்தனர். 21
அன்னம் விளையாடும் சரயு ஆற்றை அடைந்தனர். 22
வயல்களைத் தாண்டி ஒரு சோலையை அடைந்தனர். 23
அங்கிருந்து ஒரு மலைமேல் ஏறிச் சென்றனர். 24
அங்கு வேள்விப் புகை தோன்றும் ஒரு சோலையைக் கண்டு இராமன் “இது என்ன” என்று முனிவனை வினவினான். 25

அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்.        21

வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்,
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார்.      22

கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்,
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 23

தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா
ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார்.          24

தேவு மாதவன் - தொழுது, தேவர்தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு,
'யாவது ஈது?' என்றான் - எவர்க்கும் மேல் நின்றான்.            25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...