Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 84

அங்கநாடு

சிவனுக்குக் காமம் மூட்டக் காமன் தன் மலர் அம்புகளை இங்கிருந்துதான் சிவன்மீது வீசினான். சிவன் கொண்ட சினம் காமனைச் சுடக் காமன் வெந்து பூளாப்பூ போலச் சாம்பல் ஆனான்.  1
காமன் எரிந்த பின்னர் அவனது எலும்பு அங்கங்கள் கிடப்பதால் இந்த நாட்டை அங்கநாடு என்றனர். 2
பற்று, அவா, இவற்றை அடியோடு விட்டுவிட்டு, பிறவி நோய் தீர, தூய உணர்வோடு, அறிவு பெற்ற வானவன் இந்த நாட்டில் இருந்துகொண்டுதான் யோக-தவம் செய்தான் என்றால் இந்த நாட்டின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ? 3
இவ்வாறு அந்த நாட்டின் பெருமைகளை அந்த ஊரில் வாழும் அந்தணன் ஒருவன் கூறினான். அதனைக் கேட்டு அந்த ஊரில் அந்த இரவு அங்குத் தங்கி மூவரும் காலையில் எழுந்து சென்றனர். 4
இங்குள்ள ஈரத்தைச் சூரியன் முழுவதுமாக உரஞ்சிவிட்டான். தீக்கடவுளும் இதனைக் கண்டால் தன் உள்ளமும், கண்ணும் வெந்துபோவான். 5

'திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான்.                1

'வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே.     2

'பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?'           3
  
என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார்.       4

பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும்.      5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...