Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 86

பாலையின் கொடுமை

பாம்பு பசியோடு புரளும். அது பிளந்திருக்கும் வாயில் யானை நிழலைத் தேடும். 11
வடவைத் தீ சுடுதலால் காகம், யானை, மேகம் ஆகியவை கரிந்து சாம்பலாயின. 12
பேய்த்தேர் என்னும் கானல் ஓடும். வானம் வெந்துவிடும் என்று வானவர் பூமிக்கு இறங்கி வந்து ஓடுவது போல் அது காணப்படும். 13
அங்கே வேனில் அரசன் அரசு வீற்றிருக்கச் செய்தது போல ஒரு பளிங்கு மேடை இருந்தத்து. 14
நல்வினை, தீவினைகளை அழித்துவிட்டு, காமம், வெகுளி, மயக்கம் என்னும் எல்லைகளைத் தாண்டி, முத்தியில் தவம் புரிபவர் மனமும், பொன்னுக்கு உடலை விற்பவர் மனமும் பசை இல்லாமல் இருப்பது போல அந்தப் பாலைநிலம் பசையே இல்லாமல் இருந்தது. 15

புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்,
முழங்கு திண் கரி புகும் முடுகி-மீமிசை
வழங்கு வெங் கதிர் சுட, மறைவு தேடியே!    11

ஏக வெங் கனல் அரசிருந்த, காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
மாக வெங் கனல் எனும் வடவைத் தீச் சுட,
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே.   12

கானகத்து இயங்கிய கழுதின் தேர்க் குலம்,
'தான் அகத்து எழுதலால் தலைக் கொண்டு ஓடிப்போய்,
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம்' எனா,
வானவர்க்கு இரங்கி, நீர் வளைந்தது ஒத்ததே!          13

ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல்-தேர்,
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே! 14

தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே!        15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...