Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 87

வெயிலைத் தாங்கும் மந்திரம்

பொடிந்த நிலத்தின் புழுதி நிலவுலகின் கீழ் இருக்கும் நாகலோகத்திலும் விரிந்தது. 16
உடன் வரும் இராமனும் இலக்குவனும் அளவில்லாத ஆற்றல் உடையவர் ஆயினும் பூவைக் காட்டிலும் மென்மையானவர் என்பதை விசுவாமித்திர முனிவர் மனத்தில் நினைத்தார். 17
வெயிலைத் தாங்கும் பிரம மந்திரம் இரண்டினை முனிவர் இருவருக்கும் சொல்லிக்கொடுத்தார். 18
சிவன் நெற்றிக்கண்ணால் இந்த காடு வெந்ததோ, இந்திரன் இருந்த நிலத்துக்கு இந்த நிலைமை எதனால் வந்தது என்று இராமன் முனிவரை வினவினான். 19
முனிவர் தடாதகை வரலாற்றைக் கூறலானார். ஆயிரம் யானை வலிமை படைத்தவள். கூற்றுவன் போன்ற தோற்றம் கொண்டவள். உயிரினங்களைக் கொன்று  துன்புறுத்தும் வாழ்க்கையைக் உடையவள், என்றான். 20

பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்,
அரி மணிப் பணத்து அரா-அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே!               16

எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான்.      17

நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.       18

'சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம், அறிஞ! கூறு' என்றான்.      19

என்றலும், இராமனை நோக்கி, 'இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள், கூற்றின் தோற்றத்தள்,
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள், உறுதி கேள்' எனா,         20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...