![]() |
தாடகை |
மண்ணைக் கண்ணால் காய்ச்சி எடுக்கவேண்டும் என்றாலும், கடலைக் கையால் வாரவேண்டும் என்றாலும் விரும்பியதை அவள் செய்யக்கூடியவள். பாவம் எல்லாம் ஒன்று திரண்டிருக்கும் உருவம் கொண்ட பெண் அவள். 21
இரண்டு மலைகள் போல் முலை. ஊழித்தீ கக்கும் இரண்டு பிறைநிலா போல் பல். இடி முழக்கம் போன்ற குரல். – இப்படி உருவம் கொண்டவள். 22
அவள் பாம்பினைச் கையிலணியும் சூடகமாகக் கொண்டவள். காட்டில் வாழ்பவள். நீயோ ஆண்கள் கண்டாலே ஆசை கொள்ளும் தோளினை உடையவன். அவளோ சிருக்கி. அவள் பெயர் தாடகை. 23
கஞ்சத்தனம் ஒன்று மட்டுமே அனைத்து நற்குணங்களையும் அழிப்பது போல அவள் மருத நிலத்தை இப்படிப் பாலை நிலமாக மாற்றி வைத்துள்ளாள். 24
இலங்கை அரசன் ஆணைப்படி இவள் அங்கநாடு முழுவதையும் அழித்துக்கொண்டு என் வேள்விக்கும் துன்பம் செய்கிறாள். 25
'மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்; 21
'பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும்,
உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயொடும்,
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்,
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே; 22
'சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
"தாடகை" என்பது அச் சழக்கி நாமமே; 23
'உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்; 24
'இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா,
விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே!-அவள் இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்; 25
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment