Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 89

தாடகை தோன்றுதல்

இன்னும் சில நாளில் தாடகை உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் தன் வயிற்றுக்குள் போட்டுவிடுவாள் என்றார் விசுவாமித்திரர். 26
அவள் எங்கு வாழ்கிறாள் என்று இராமன் வினவினான். 27
இந்த மலையில்தான் அவள் வாழ்கிறாள் என்று ஐம்புலன்களையும் அடக்கிய முனிவன் காட்டும்போது மலை பற்றி எரிவது போன்ற தோற்றத்துடன் தாடகை தோன்றினாள். 28
அவளது கால் சிலம்பு மலையில் பதியும்படி வந்தாள். அவள் மிதித்த காலடிப் பள்ளத்தில் கடலே புகுமாறு வந்தாள். 29
துடிக்கும் புருவம், பிறைப்பல் தெரியும் குகை போன்ற வாய், வடவைக்கனல் தோன்றும் விழிகள் ஆகியவற்றுடன் வந்தாள். 30

'முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்' என்றான்.                26

அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?' என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான்.    27

கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகத்திடை அடைத்த முனி, 'ஐய!
இவ் வரை இருப்பது அவள்' என்பதனின் முன்பு, ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள்.           28

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள்           29

இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள்.      30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...