Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 91

விசுவாமித்திர முனிவனைப் புளியம்பழக் கோது என்று எண்ணித் தாடகை உண்ணாமல் விட்டுவிட்டாளாம் 
இவளுக்கு ஆண் உருவம் வேறு வேண்டுமா

இராமன் எண்ணத்தை வசிட்டன் உணர்ந்துகொண்டான். 36
இவள் தீமை எல்லாவற்றையும் செய்பவள். என்னைப் புளியில் இருக்கும் கோது என்று எண்ணி உண்ணாமல் விட்டு வைத்திருக்கிறாள். இவளைப் பெண் என்று எண்ணலாமா என்று முனிவன் இராமனிடம் கூறினான். 37
இவள் பெயரைச் சொன்னாலே ஆண்மை அழிந்துபோகும். 38
இவளுக்குப் பயந்து இந்திரனே ஓடிவிட்டான் என்னும்போது இவளைப் பெண் என்று எண்ணலாமா, என்றான் முனிவன். 39
உயிரினங்களையெல்லாம் உண்டுகொண்டு அறத்தை அழித்துக்கொண்டிருப்பவளுக்கு ஆண்மை உருவமும் வேண்டுமா? 40

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள், தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும், பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நான்மறை அந்தணன் கூறுவான்:   36

'தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்!       37

'நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?               38

'இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்,
தந்திரம் படத் தானவர், வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு,
அந்தரம் இனி யாதுகொல், ஆண்மையே?       39

'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ?               40

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...