Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 94

இராமனின் முதல் வெற்றி

காடெல்லாம் இரத்தம் ஓடிற்று. அரக்கர் குல வீழ்ச்சியைக் காட்டும் அறிகுறிக் கொடி பறப்பது போலத் தடாகை வீழ்ந்தாள். 51
அவள் வாயிலிருந்து ஒழுகிய இரத்தம் அந்தி வானம் சிவந்து தோன்றுவது போல இருந்தது. 52
முனிவர் ஆணைப்படி இராமன் செய்த முதற்போர் (கன்னிப்போர்) (maiden war) அரக்கர் குலத்தவரின் உயிரைக் குடிக்கத் திரியும் கூற்றுவனுக்கு முதல் சுவையாக அமைந்தது. 53
நாங்கள் எங்கள் இருப்பிடத்தைப் பெற்றுவிட்டோம். தெய்வப் படைக்கருவிகளை இராமனுக்கு வழங்குங்கள் – என்று முனிவருக்குச் சொல்லிய தேவர் இராமன் மீது மலர்மாரி பொழிந்தனர். 54

பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்.  51

கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே!  52

வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே. 53

'யாமும் எம் இருக்கை பெற்றேம்; உனக்கு இடையூறும் இல்லை;
கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி' என்னா,
மா முனிக்கு உரைத்து, பின்னர், வில் கொண்ட மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினாரே.     54

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...