Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 95

மிகைப் பாடல்கள் – பகுதி 1

விசுவாமித்திரர் பிரம மந்திரம் இரண்டினை இராமனுக்கும் இலக்குவனுக்கும் சொல்லிக்கொடுத்தார். அதனைக் கூறியதும் கனல் வீசும் காடு ஆற்றுநீரில் குளிப்பது போல் ஆயிற்று. 18-1
முனிவர் தாடகை வரலாற்றைக் கூறலானார். மலை போன்ற தோள் கொண்டவனே! கேள். பிரமன் படைத்த உயிரிங்கள் எல்லாவற்றையும் வாரி வாயில் போட்டுச் செரிமானம் செய்துகொள்பவள் பற்றிச் சொல்கிறேன். கேள். 20-1
சற்சரன் போல வலிமை கொண்டவன் சுகேது. 20-2
மகப்பேறு வேண்டிச் சுகேது பிரமனை நோக்கித் தவம் செய்தான். 20-3
மகள் பிறக்கப் பிரமன் வரம் தந்தான். 20-4

உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்:       18-1

'கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:   20-1

'இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான்.     20-2

'அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.     20-3

'முந்தினன் அரு மறைக் கிழவன், "முற்றும் நின்
சிந்தனை என்?" என,"சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க" என, "நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்" என்றான்.           20-4

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...