Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர்

“மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அசைந்தன. 1
சீதையை மணக்க இராமன் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பில் ஆடுவது போலக் கொடிகள் அசைந்தாடின. 2
மிதிலை மாடத்தில் வானளாவப் பறந்த வெண்ணிறக் கொடிகள் மேகத் துளிகளால் நனைந்துகொண்டும், அகில் புகைகளால் காய்ந்துகொண்டும் அசைந்தாடின. 3
மன்மதன் அமுத மையில் தோய்த்துச் சீதையை எழுதினான். முடியவில்லை. இத்தகைய சீதை திருமகளை ஏந்திக்கொண்டிருக்கும் தாமரை மலர் போல் விளங்கிய மிதிலை மூவரும் கண்டனர். 4
அகத்தியன் உண்ட கடல் போல் அகன்ற தெரு. வானத்து மீன்கள் போல அதில் மாடி வீடுகள். மைந்தரும், மகளிரும் வேண்டாம் என்று களைந்த அணிகலன்கள் கிடக்கும் மாடிவீடுகள். இவை இருக்கும் தெருவில் மூவரும் சென்றனர். 5

'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா!     1

நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார்.               2

பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார்         4

சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார்.              5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 10. மிதிலைக் காட்சிப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 131

1000 கண் பெற்ற இந்திரன்
ஆயிரம் பெண்குறி ஆயிரம் கண் ஆனது

மிதிலை நாட்டு வளம்
முத்து, வயிரம், மணி, பவளம் அணிந்த கழுத்தும், பூ மிகுந்த கூந்தலும், பூக மரங்களும் கொண்டதாக மிதிலை நாடு விளங்கியது. 7-1

இந்திரன் பெற்ற சாபம்
மேனி முழுவதும் 1000 பெண்குறித் துளைகளுடன் காணப்பட்ட இந்திரனைக் கண்ட தேவர்களும், பிரமனும் சாபம் இட்ட கோதம முனிவனிடம் சென்று வேண்ட, முனிவன் சினம் தணிந்து ஆயிரம் யோனிகளை ஆயிரம் கண்களாக மாற்றினார். ஆனால் அகலிகை மட்டும் கல்லாய்க் கிடந்தாள். 23-1
அகலிகைக்கும், வானவர்க்கும் ஆகாதவன் ஆகிவிட்டேன், என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று இந்திரன் முனிவனை வேண்ட, ஆயிரம் கண்கள் ஆகுமாறு சாபத்தை முனிவர் மாற்றினார். 23-2

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி (திருக்குறள்)


மது மலைந்த வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம்.    7-1

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். 23-1

'வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி' என்ன,
'பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக,
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம்' என்றான்.              23-2  

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 130

கங்கைக்குப் பகிரதி, சானவி பெயர்கள்

அகத்தியன் தன் வேள்வியை அழித்த கங்கை ஆற்று நீர் முழுவதையும் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். பகிரதன் தான் அரும்பாடு பட்டுக் கங்கையைக் கொண்டுவந்த நோக்கத்தை முனிவனிடம் கூறினான். நிலைமை உணர்ந்த முனிவன் கங்கையைத் தன் காது வழியாக வெளியிட்டான். அது பகிரதன் முன்னோரின் சாம்பலில் பாய்ந்தது. 2-26
சகரர்கள் நரகம் செல்லாமல் வானுலகம் சென்றனர். வானவர் மலர்மழை பொழிந்தனர். முரசு முழக்கி சகரரை வரவேற்றனர். பகிரதன் தன் அரண்மனைக்கு மீண்டான். 2-27
இப்படி வானுலகக் கங்கை பகிரதன் தவத்தால் மண்ணுலகம் வந்தது என்று விசுவாமித்திரன் இராமனுக்கு எடுத்துரைத்தான். 5-28
சகரர் பொருட்டுப் பகிரதன் கொண்டுவந்ததால் “பகிரதி” என்றும், சன்னு முனிவன் செவியின் வழி வெளிப்பட்டதால் “சானவி” என்றும் கங்கை ஆற்றுக்குப் பெயர் உண்டாயிற்று. 5-29
இந்தச் செய்திகளை வியப்போடு இராமனும், இலக்குவனும் கேட்டு முனிவனை வணங்கினர். பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்றனர். 5-30

'உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப,
கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
"கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து,
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே.          5-26

'நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான்  5-27

'அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த!           5-28

'சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி,
பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி" ஆகி,
மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம்'.  5-29

என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா,         5-30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 129

சிவன் சடையில் கங்கை அடங்கியது

பகிரதன் மீண்டும் சிவனை வேண்ட, சிவன் “அஞ்சவேண்டாம், துளியும் பிதிராவகையில் காப்பேன்” என்று கூறினார். பகிரதன் மீண்டும் 2,500 ஆண்டுகள் கங்கையை நோக்கித் தவம் செய்தான். 5-21
நீர், திருநீறு, காற்று, சருகு, கதிர்-ஒளி ஆகியவற்றை மட்டும் துய்த்துக்கொண்டு வேறு எதனையும் உண்ணாமல் 30,000 பருவம் பகிரதன் தவம் புரிந்தான். 5-22
பிரமன் படைத்த உலகமெல்லாம் நடுங்கும்படி கங்கை இறங்கிவந்தாள். அதில் ஒரு சொட்டும் சிந்தாவண்ணம் மலைமகள் கணவன் சிவன் தன் சடையில் வாங்கி மறைத்துக்கொண்டான். 5-23
பகிரதன் சிவனை வேண்டினான். புல்லில் இருக்கும் பனித்துளி விழுவது போலத் தன் தலையிலிருந்து சிறிதே ஒழுகுமாறு சிவபெருமான் கங்கையை மண்ணுலகில் விட்டான். 5-24
அப்படி இறங்கிய கங்கை சன்னு முனிவனின் (அகத்தியன்) வேள்வியை அழித்தது. அதனைக் கண்ட முனிவன் அதனைத் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். 5-25

'எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான்.           5-21

'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான்.            5-22

'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர.            5-23

'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள்.             5-24

'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா,      5-25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 128

கங்கை

பிரமன் பகிரதன் முன் தோன்றினான். முனிவன் சினத்தால் மாண்ட உன் முன்னோர் நரகம் செல்லாமல் இருக்கவேண்டுமானால் வானுலகில் ஓடும் கங்கை ஆறு உன் முன்னோரின் எலும்புகளின் மீது பாயவேண்டும் என்று பிரமன் கூறினான். 5-16
கங்கை ஆறு மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தை முக்கண் சிவனைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. எனவே சிவனை நோக்கித் தவம் செய்க என்றும் கூறினார். 5-17
பகிரதன் சிவனை நோக்கி முன்போலவே 10,000 ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி உன் கருத்தினை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார். பகிரதன் கங்கையை நோக்கி 5,000 ஆண்டுகள் தவம் செய்தான்.  5-18
கங்கை பகிரதன் முன் தோன்றினாள். நான் மண்ணுலகுக்கு வந்தால் என் வேகத்தை யார் தாங்க முடியும். தாங்குவேன் என்று சிவன் சொன்னது வியப்பாக உள்ளது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 5-19
கரந்தை, ஊமத்தம், எருக்கு, கூவிளை, கடுக்கை(கொன்றை) மலர்களைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் சிவனை நோக்கி, மீண்டும் இரண்டரை ஆண்டு பகிரதன் தவம் செய்தான். 5-20

'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான்.        5-16

'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான்.               5-17

'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான்.              5-18

'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள்.                5-19

'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 127

பகிரதன்

சகரர் தோண்டிய பள்ளத்தில் நீர் தேங்கிச் சாகரம் என்னும் பெயரைப் பெற்றது. வேந்தன் நாடாண்டான். இவன் மரபில் வந்தவன் பகிரதன். 5-11
முன்னோர் இறந்த செய்தியைச் சிலர் பகிரதனுக்கு நினைவூட்டினர். 5-12
இறந்தவர் நரகம் செல்லாமல் இருக்க உதவ வேண்டும் என்று முனிவனைப் பகிரதன் வேண்டினான். 5-13
பிரமனை நோக்கித் தவம் செய்யுமாறு முனிவர் அறிவுறுத்தினார். 5-14
நாடாளும் பணியைச் சுமந்திரன் என்பவனிடம் ஒப்படைத்துவிட்டுப் பகிரதன் பதினாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் செய்தான். 5-15

'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான்.            5-11

'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்:  5-12

'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்:        5-13

'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன்,     5-14

'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்:               5-15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 126

கபிலன் குதிரை

வடகிழக்குத் திசையில் சகரர் நூறு யோசனை நீள-அகலம், ஆழம் மண்ணைத் தோண்டினர். கபிலனுக்குப் பின்னால் இருந்த குதிரையைக் கண்டனர். குதிரையை வைதனர். 5-6
இதனைக் கண்ட முனிவன் சினந்தான். சபித்தான். அனைவரும் சாம்பல் ஆயினர். ஒற்றாளிகள் வேள்வி வேந்தனிடம் சென்று செய்தியைக் கூறினர். 5-7
“என் வேள்வி வீணாவதோ” என்று சொல்லிக்கொண்டு வேந்தன் கபிலன் வாழும் பாதாளம் சென்றான். 5-8
கபில முனிவரைத் தொழுதான். முனிவர் “குதிரையைக் கொண்டுசெல்” என்றார். 5-9
குதிரையைக் கொண்டுவந்த வேந்தன் அதனை வேள்வியில் இட்டுத் தேவர்களுக்கு அவிப்பாகம் ஆக்கானான். 5-10

'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார்.        5-6

'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர்.     5-7

'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான்.         5-8

'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான்.        5-9

'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து.  5-10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...