Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர்

“மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அசைந்தன. 1
சீதையை மணக்க இராமன் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பில் ஆடுவது போலக் கொடிகள் அசைந்தாடின. 2
மிதிலை மாடத்தில் வானளாவப் பறந்த வெண்ணிறக் கொடிகள் மேகத் துளிகளால் நனைந்துகொண்டும், அகில் புகைகளால் காய்ந்துகொண்டும் அசைந்தாடின. 3
மன்மதன் அமுத மையில் தோய்த்துச் சீதையை எழுதினான். முடியவில்லை. இத்தகைய சீதை திருமகளை ஏந்திக்கொண்டிருக்கும் தாமரை மலர் போல் விளங்கிய மிதிலை மூவரும் கண்டனர். 4
அகத்தியன் உண்ட கடல் போல் அகன்ற தெரு. வானத்து மீன்கள் போல அதில் மாடி வீடுகள். மைந்தரும், மகளிரும் வேண்டாம் என்று களைந்த அணிகலன்கள் கிடக்கும் மாடிவீடுகள். இவை இருக்கும் தெருவில் மூவரும் சென்றனர். 5

'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா!     1

நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார்.               2

பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார்         4

சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார்.              5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 10. மிதிலைக் காட்சிப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 131

1000 கண் பெற்ற இந்திரன்
ஆயிரம் பெண்குறி ஆயிரம் கண் ஆனது

மிதிலை நாட்டு வளம்
முத்து, வயிரம், மணி, பவளம் அணிந்த கழுத்தும், பூ மிகுந்த கூந்தலும், பூக மரங்களும் கொண்டதாக மிதிலை நாடு விளங்கியது. 7-1

இந்திரன் பெற்ற சாபம்
மேனி முழுவதும் 1000 பெண்குறித் துளைகளுடன் காணப்பட்ட இந்திரனைக் கண்ட தேவர்களும், பிரமனும் சாபம் இட்ட கோதம முனிவனிடம் சென்று வேண்ட, முனிவன் சினம் தணிந்து ஆயிரம் யோனிகளை ஆயிரம் கண்களாக மாற்றினார். ஆனால் அகலிகை மட்டும் கல்லாய்க் கிடந்தாள். 23-1
அகலிகைக்கும், வானவர்க்கும் ஆகாதவன் ஆகிவிட்டேன், என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று இந்திரன் முனிவனை வேண்ட, ஆயிரம் கண்கள் ஆகுமாறு சாபத்தை முனிவர் மாற்றினார். 23-2

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி (திருக்குறள்)


மது மலைந்த வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம்.    7-1

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். 23-1

'வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி' என்ன,
'பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக,
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம்' என்றான்.              23-2  

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 130

கங்கைக்குப் பகிரதி, சானவி பெயர்கள்

அகத்தியன் தன் வேள்வியை அழித்த கங்கை ஆற்று நீர் முழுவதையும் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். பகிரதன் தான் அரும்பாடு பட்டுக் கங்கையைக் கொண்டுவந்த நோக்கத்தை முனிவனிடம் கூறினான். நிலைமை உணர்ந்த முனிவன் கங்கையைத் தன் காது வழியாக வெளியிட்டான். அது பகிரதன் முன்னோரின் சாம்பலில் பாய்ந்தது. 2-26
சகரர்கள் நரகம் செல்லாமல் வானுலகம் சென்றனர். வானவர் மலர்மழை பொழிந்தனர். முரசு முழக்கி சகரரை வரவேற்றனர். பகிரதன் தன் அரண்மனைக்கு மீண்டான். 2-27
இப்படி வானுலகக் கங்கை பகிரதன் தவத்தால் மண்ணுலகம் வந்தது என்று விசுவாமித்திரன் இராமனுக்கு எடுத்துரைத்தான். 5-28
சகரர் பொருட்டுப் பகிரதன் கொண்டுவந்ததால் “பகிரதி” என்றும், சன்னு முனிவன் செவியின் வழி வெளிப்பட்டதால் “சானவி” என்றும் கங்கை ஆற்றுக்குப் பெயர் உண்டாயிற்று. 5-29
இந்தச் செய்திகளை வியப்போடு இராமனும், இலக்குவனும் கேட்டு முனிவனை வணங்கினர். பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்றனர். 5-30

'உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப,
கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
"கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து,
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே.          5-26

'நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான்  5-27

'அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த!           5-28

'சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி,
பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி" ஆகி,
மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம்'.  5-29

என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா,         5-30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 129

சிவன் சடையில் கங்கை அடங்கியது

பகிரதன் மீண்டும் சிவனை வேண்ட, சிவன் “அஞ்சவேண்டாம், துளியும் பிதிராவகையில் காப்பேன்” என்று கூறினார். பகிரதன் மீண்டும் 2,500 ஆண்டுகள் கங்கையை நோக்கித் தவம் செய்தான். 5-21
நீர், திருநீறு, காற்று, சருகு, கதிர்-ஒளி ஆகியவற்றை மட்டும் துய்த்துக்கொண்டு வேறு எதனையும் உண்ணாமல் 30,000 பருவம் பகிரதன் தவம் புரிந்தான். 5-22
பிரமன் படைத்த உலகமெல்லாம் நடுங்கும்படி கங்கை இறங்கிவந்தாள். அதில் ஒரு சொட்டும் சிந்தாவண்ணம் மலைமகள் கணவன் சிவன் தன் சடையில் வாங்கி மறைத்துக்கொண்டான். 5-23
பகிரதன் சிவனை வேண்டினான். புல்லில் இருக்கும் பனித்துளி விழுவது போலத் தன் தலையிலிருந்து சிறிதே ஒழுகுமாறு சிவபெருமான் கங்கையை மண்ணுலகில் விட்டான். 5-24
அப்படி இறங்கிய கங்கை சன்னு முனிவனின் (அகத்தியன்) வேள்வியை அழித்தது. அதனைக் கண்ட முனிவன் அதனைத் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். 5-25

'எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான்.           5-21

'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான்.            5-22

'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர.            5-23

'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள்.             5-24

'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா,      5-25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 128

கங்கை

பிரமன் பகிரதன் முன் தோன்றினான். முனிவன் சினத்தால் மாண்ட உன் முன்னோர் நரகம் செல்லாமல் இருக்கவேண்டுமானால் வானுலகில் ஓடும் கங்கை ஆறு உன் முன்னோரின் எலும்புகளின் மீது பாயவேண்டும் என்று பிரமன் கூறினான். 5-16
கங்கை ஆறு மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தை முக்கண் சிவனைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. எனவே சிவனை நோக்கித் தவம் செய்க என்றும் கூறினார். 5-17
பகிரதன் சிவனை நோக்கி முன்போலவே 10,000 ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி உன் கருத்தினை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார். பகிரதன் கங்கையை நோக்கி 5,000 ஆண்டுகள் தவம் செய்தான்.  5-18
கங்கை பகிரதன் முன் தோன்றினாள். நான் மண்ணுலகுக்கு வந்தால் என் வேகத்தை யார் தாங்க முடியும். தாங்குவேன் என்று சிவன் சொன்னது வியப்பாக உள்ளது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 5-19
கரந்தை, ஊமத்தம், எருக்கு, கூவிளை, கடுக்கை(கொன்றை) மலர்களைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் சிவனை நோக்கி, மீண்டும் இரண்டரை ஆண்டு பகிரதன் தவம் செய்தான். 5-20

'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான்.        5-16

'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான்.               5-17

'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான்.              5-18

'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள்.                5-19

'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 127

பகிரதன்

சகரர் தோண்டிய பள்ளத்தில் நீர் தேங்கிச் சாகரம் என்னும் பெயரைப் பெற்றது. வேந்தன் நாடாண்டான். இவன் மரபில் வந்தவன் பகிரதன். 5-11
முன்னோர் இறந்த செய்தியைச் சிலர் பகிரதனுக்கு நினைவூட்டினர். 5-12
இறந்தவர் நரகம் செல்லாமல் இருக்க உதவ வேண்டும் என்று முனிவனைப் பகிரதன் வேண்டினான். 5-13
பிரமனை நோக்கித் தவம் செய்யுமாறு முனிவர் அறிவுறுத்தினார். 5-14
நாடாளும் பணியைச் சுமந்திரன் என்பவனிடம் ஒப்படைத்துவிட்டுப் பகிரதன் பதினாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் செய்தான். 5-15

'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான்.            5-11

'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்:  5-12

'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்:        5-13

'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன்,     5-14

'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்:               5-15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 126

கபிலன் குதிரை

வடகிழக்குத் திசையில் சகரர் நூறு யோசனை நீள-அகலம், ஆழம் மண்ணைத் தோண்டினர். கபிலனுக்குப் பின்னால் இருந்த குதிரையைக் கண்டனர். குதிரையை வைதனர். 5-6
இதனைக் கண்ட முனிவன் சினந்தான். சபித்தான். அனைவரும் சாம்பல் ஆயினர். ஒற்றாளிகள் வேள்வி வேந்தனிடம் சென்று செய்தியைக் கூறினர். 5-7
“என் வேள்வி வீணாவதோ” என்று சொல்லிக்கொண்டு வேந்தன் கபிலன் வாழும் பாதாளம் சென்றான். 5-8
கபில முனிவரைத் தொழுதான். முனிவர் “குதிரையைக் கொண்டுசெல்” என்றார். 5-9
குதிரையைக் கொண்டுவந்த வேந்தன் அதனை வேள்வியில் இட்டுத் தேவர்களுக்கு அவிப்பாகம் ஆக்கானான். 5-10

'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார்.        5-6

'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர்.     5-7

'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான்.         5-8

'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான்.        5-9

'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து.  5-10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 125

சகரர்

இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும்கங்கை ஆற்றை அடைந்தனர்.

இந்தப் பெரு நதியின் தகைமைகளைக் கூறுமாறு இராகவன் முனிவனை வேண்டினான். முனிவர் கூறலானார். அயோத்தியை உன் மரபில் முன்பு இருந்த சகரன் என்பவன் ஆண்டுவந்தான். 5-1
இந்த சகரனுக்கு இரண்டு பிள்ளைகள். இவர்களில் ஒருத்தி விதர்பை. இவள் கணவன் அசமன். அசமனுக்கு விதர்பை பெற்ற மகன் அஞ்சுமன். இவன் பறவை வேந்தன் சடாயு என்பவனுக்கு இளையவளாகிய சுமதி என்பவளை மணந்தான். அஞ்சுமன், சுமதி ஆகியோருக்குப் பிறந்த குழந்தைகள் அறுபதினாயிரம் (60,000) பேர். 5-2
இவர்களைப் பற்றிச் சகரன் இந்திரனிடம் சொன்னான். இவர்களின் வலிமையைக் கண்ட இந்திரன் அவர்களை கபிலன் என்னும் முனிவனின் குதிரைத் தொடையில் மறைத்து வைத்துவிட்டான். 5-3
இந்திரன் செய்தது அறியாமல் அஞ்சுமன் தன் மக்களைத் தேடி வருந்துகையில் சகரன் வாயிலாக உண்மையை அறிந்தான். 5-4
இதனைக் கேட்ட வேந்தன் அஞ்சுமன் சகரர் என்பாரைக் கொண்டு கபிலன் குதிரையைத் தேடச்செய்தான். சகரர்கள் நிலத்தைப் பாதாளம் வரைத் தோண்டினர். 5-5

'இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
எந்தை! கூறுக' என்று இராகவன் வினவுற, 'எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான்.               5-1

'விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். 5-2
   
'திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான்.         5-3

'வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு.            5-4

'கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற.   5-5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 124

சரவணம்

திதி “மகன் ஒருவனை எனக்குத் தா” என்று காசிபனை வேண்டினாள். “பிள்ளை வரம் தந்தேன்” என்று காசிபன் கூறினான். “ஆயிரம் பருவ காலம் தவம் செய்து பெறுவாயாக” என்றும் கூறினார். 2-26
திதி என்பவளும் அவ்வாறே தவம் செய்தாள். இந்திரன் அவளுக்கு அடிமை செய்துவந்தான். திதி குழந்தை பெற்றதும் அதனை இந்திரன் கேட்டு வாங்கி ஏழு துண்டங்களாக வெட்டினான். திதி விம்மினாள். அந்தக் குழந்தைகளுக்கு “மருந்து” என்று பெயர் சூட்டிளாள். 3-27
இப்படி இந்திரன், திதி, மருந்து ஆகியோர் இருந்த சோலை இது என்று விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறினார். அந்த மைந்தன் உமை அளித்த மகன். அவன் வளர்ந்த இடம் சரவணம் என்னும் இந்தச் சோலை என்றும் முனிவர் கூறினார்.
தொடர்புடைய கதை


'என்று கூறலும், "மகவு உனக்கு அளித்தனம்; இனி, நீ,
சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர,
நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி" என்று
அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள்.              3-26

'கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி,
நாட்டம் நீர் தர, "மருந்து" எனும் நாமமும் நவின்றான்.      3-27

'ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான்.'             3-28

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 123

மோகினி

பாற்கடலைக் கடைதல்
மோகினி

மந்தர மலையைப் பிடுங்கி நிறுத்தினர். வாசுகி பாம்பைக் கயிறாகச் சுற்றினர். நிலாவை நிறுத்தினர். ஆமையை மத்தாக்கினர். பாற்கடலைக் கடைந்தனர். பூமியைச் சுமக்கும் அனந்தன் என்னும் பாம்பே நெளிந்தான். 3-21
ஆமை முதுகில் மந்தரம் வைக்கப்பட்டது. முனிவன் சாபத்தால் கடல் புக்க இந்திரன் செல்வம் வெளிப்பட வேண்டும் என்று ஆயிரக் கணக்கான கைகள் இழுத்துக் கடைந்தன. 3-22
அமிழ்தம் வெளிப்பட்டது. திருமால் மோகினி வடிவில் தோன்றினார். அசுரர்கள் மோகினியையே பார்த்துக்கொண்டிருந்தனர். அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டனர். 3-23
கடையும்போது வெளிப்பட்ட நஞ்சினையும், பிறைநிலாவையும் சிவனுக்குத் திருமால் அளித்தார். கற்பக மரம் முதலானவற்றை இந்திரனுக்கு அளித்தார். திருமகளையும், முத்தாரத்தையும் திருமால் எடுத்துக்கொண்டார். 3-24
அந்த நேரத்தில் திதி என்பவள் காசிபனை வணங்கி என் மகன் இந்திரன் முதலானோர் புணர்ச்சியால் இறந்துபோயினர். நீ எனக்கு ஒரு மகனைத் தா என்று வேண்டினாள். 3-25

'மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான்.              3-21

'திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப,
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே,
அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான்.      3-22

'இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால்,
பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க,
சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார்.       3-23

'வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி,
திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி,            3-24

'அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள்,
வந்து காசிபன் மலரடி வணங்கி, "என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு" என்றாள். 3-25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 122

பாற்கடலைக் கடைதல்
அமிழ்தம் கடைக

முனிவரின் சாபத்தால் விண்ணகமும், மண்ணகமும் வறுமையுற்றது. அதனால் தேவர்களும், சிவனும், பிரமாவும் சேர்ந்து திருமாலிடம் சரண் அடைந்தனர். 3-17
திருமால் “அஞ்சவேண்டாம்” என்று கையமர்த்தினார். 3-18
திருமால் அவர்களிடம் கூறினார். மந்தரம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை தயிர் கடையும் கயிறாகவும், நிலா தூணாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் வெவ்வேறு பக்கம் நின்று பாற்கடலை அமிழ்தம் தோன்றும்வரையில் கடையுங்கள் என்றார். 3-19
நானும் அங்கே வருவேன் என்றார். தேவர்கள் மகிழ்ந்து சென்றனர். 3-20

'வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும்,
தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி,
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார். 3-17

'வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும்,
"தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்" எனச் செப்ப,
"அஞ்சல், அஞ்சல்!" என்று உரைத்தனன், உலகு எலாம் அளந்தோன்  3-18

'"மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்;      3-19

'"யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென எழுந்து
போமின்" என்று அருள்புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்து,
"நாமம் இன்று" எனக் குனித்தனர், நல்குரவு ஒழிந்தது.
ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர்.  3-20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 121

இந்திரன் செல்வம் கடலில் மூழ்கியது

திருமகள் மாலையை அலட்சியம் செய்த இந்திரனை முனிவர் சபித்தார். உன் வானுலகம் சாம்பலாகட்டும் என்றார். திசை இருண்டது. உலகமே சுழன்றது. 3-11
முனிவன் விழிகளில் புகை எழுந்தது. சதமகனே (இந்திரனே) கேள், என்று முனிவர் வெகுண்டு கூறலானார். 3-12
திருமால் மார்பில் வீற்றிருக்கும் திருமகள் மாலை இது. இதனைப் பெற்ற காசிபன் மனைவி என் தவ வலிமை கண்டு எனக்குத் தந்தாள். 3-13
இன்று உன்னைக் கண்ட மகிழ்ச்சியில் மாலையை உனக்கு வழங்கினேன். நீ இகழ்ந்தாய். அதனால், உன் செல்வமும், பிற வளங்களும் கடலில் மூழ்கட்டும். நீ உன் புகழ் குன்றித் துன்புறுவாயாக – என்றார். 3-14
அரமடந்தையர், கற்பகம், நவநிதி, அமிர்தம், காமதேனு, குதிரை, யானை முதலான அனைத்தும் கடலில் மூழ்கின. 3-15
அப்போது மனம் நொந்த இந்திரன் முனிவனை வேண்டினான். திருமால் அருளால் உன் செல்வத்தைப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். 3-16

'"கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால்,
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்" என்று, அழியா,
விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும்.            3-11

'புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்;
சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப,
"மிகை எழுந்திடு சதமக! கேள்" என வெகுண்டான்.               3-12

'"பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு இல்
வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால்.    3-13

'"இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப,
குன்றி, நீ துயர் உறுக" என உரைத்தனன், கொதித்தே.         3-14

'அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம்,
சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின்.             3-15

'அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து,
வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த,
"நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால், நயக்க
முந்தும்" என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான்.               3-16

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 120

இந்திரன்

தேவர் உலகில் இந்திரன் ஐராவதம் என்னும் களிற்றின் மேல் தெருவில் உலா வந்துகொண்டிருந்தான். 3-6
அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி ஆகியோர் பாடி ஆடிக்கொண்டிருந்தனர். காமன் தன் அம்பை எய்துகொண்டிருந்தான். 3-7
நிலா அசைவது போல இரு மருங்கும் வெண்சாமரை அவனுக்கு வீசிக்கொண்டிருந்தது. நிலா போன்ற வெண்கொற்றக் குடையின்கீழ் அவன் வீற்றிருந்தான். 3-8
பேரிகை, குறடு, பாண்டில், சங்கு ஆகியவை நான்மறை முழக்கம் போல ஒலிக்கும் விழாக் கோலத்தில் இந்திரனை முனிவன் கண்டான். 3-9
முனிவன் திருமகள் மாலையை இந்திரனுக்கு வழங்கினான். இந்திரன் அந்த மாலையைத் தன் கையிலிருந்த தோட்டியால் (யானையைச் செலுத்தும் அங்குசம்) வாங்கி, தன் யானையின் கழுத்தில் வைத்தான். அந்த யானை அந்த மாலையைத் தன் துதிக்கையால் எடுத்துத் தன் காலடியில் போட்டு மிதித்தது. 3-10

'பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க,   3-6

'அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப,
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க,            3-7

'நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே, இரு புடையினும், சாமரை புரள,
கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி,
மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க,     3-8

'தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப,
முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை
விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான்.       3-9

'தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன் கை
வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி,
துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்;
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது, அப் பகடு.              3-10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 119

திருமகள் மாலை

இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும்ஒரு சோலையை அடைந்தனர். அந்தச் சோலையைப் பற்றி இராமன் முனிவனை வினவினான். முனிவன் சொல்கிறான். இது காசிபன் மனைவி தவம் செய்த இடம். 3-1
திருமகள் அவள்முன் தோன்றி ஒரு மலர்மாலை கொடுத்தாள் 3-2
அந்த மாலையை வாங்கிய காசிபன் மனைவி அதனை யார் ஒன்றில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். 3-3
அப்போது முனிவன் ஒருவன் வந்தான். மாலையை முனிவனுக்குக் கொடுத்து இது திருமகள் தந்த மாலை என்று அதன் சிறப்பினைத் தெரிவித்தாள். 3-4
முனிவன் அதனை ஏற்றுத் தன் தலையில் சூடிக்கொண்டு தேவர் உலகம் சென்றான். 3-5

'இனைய சோலை மற்று யாது?' என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; 'மேல்நாள்,
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள், இவண்' என வலித்தான்.              3-1

'அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை,
புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து.           3-2

'அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
"என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்" என்று,
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். 3-3

'"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள் அளியால்,             3-4

'"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?" என ஆடி,
வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான்          3-5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 118

அகலிகையைக் கோதமனிடம் ஒப்படைத்தல்

அகலிகையோடு மூவரும் கோதமன் இருப்பிடம் சென்றனர். 26
“மை நிறம் கொண்ட இராமன் காலடிப் புழுதி மேனியில் பட்டதும் அகலிகை பெண் உருவம் பெற்றாள். இவள் நெஞ்சத்தில் பிழை இல்லாதவள். இவளை அழைத்துக்கொள்க” என்று விசுவாமித்திரன் கோதமனுக்குக் கூறினான். பிரமன் போன்ற கோதமனும் அதனை நெஞ்சில் ஏற்றுக்கொண்டான். 27
கோதமனை வணங்கி, அகலிகையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, மூவரும் மிதிலை மதிலின் கிடங்கை அடைந்தனர். 28

அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி,        26

'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான்             27

குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார்.       28

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 117

இராமன் அகலிகையை வாழ்த்தல்
கல்லான அகலிகை பெண் ஆனாள்

கோதம முனிவன் இந்திரனைச் சினந்து நோக்கினான். “உன் உடம்பெல்லாம் பெண்-குறிக்-கண்கள் ஆயிரம் தோன்றட்டும்” என்று சாபமிட்டான். அவ்வாறே அவன் உடம்பு ஆயிற்று. 21
இந்திரன் போன பின்னர் “கல் ஆகுக” என்று அகலிகையைக் கோதமர் சபித்தார். அவள் முனிவர் காலடியில் வீழ்ந்தாள். 22
பிழைத்து பொறுத்தல் வேண்டும். இதற்கு முடிவு அருள வேண்டும் - என்று அகலிகை முனிவனை வேண்டினாள். தசரத-இராமன் கால்-புழுதி பட்டு இந்தக் கல்-உருவம் நீங்குக – என்று முனிவர் அருளினார். 23
இவ்வாறு அகலிகை வரலாற்றை இராமனுக்குக் கூறிய விசுவாமித்திரர் “தாடகையைக் கொன்றபோது உன் கைவண்ணத்தைக் கண்டேன். இப்போது கல்லைப் பெண்ணாக்கியபோது உன் கால்வண்ணத்தை இங்குக் கண்டேன்” என்று கூறி இராமனைப் புகழ்ந்தார். 24
“இனி முனிவன் அருள் உண்டாகுமாறு நடந்துகொள்” என்று அகலிகையிடம் இராமன் கூறினான். அவளும் இராமனை வணங்கிவிட்டுச் சென்றாள். 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி (திருக்குறள்)

'தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய
தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக" என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன, இமைப்பின் முன்னம்          21

'எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள்.    22

'"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!" என்ன,
"தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி" என்றான்.  23

'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.'              24

தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
'மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
போது நீ, அன்னை!' என்ன பொன் அடி வணங்கி போனாள்.             25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 116

கோதமன் சாபம்
இந்திரனும் அகலிகையும்

முனிவன் கூறக் கேட்ட இராமன் “என் ஐயனே! இவள் இவ்வாறு கல்லாகக் கிடந்தது இவளது ஊழ்வினையினாலோ, அல்லது இடையில் நேர்ந்ததோ” என வினவினான். 16
முனிவன் கூறுகிறான். குலிசப்படை படை கொண்ட இந்திரன், அகலகையின் கணவனாகிய முனிவன் இல்லாதபோது மான் போல் மருண்டு நோக்கும் அகலிகையின் முலையை விரும்பினான். 17
அகலிகையின் கண் வேலும், மனமதன் அம்பும் இந்திரனைத் தாக்கின. ஒருநாள் முனிவனை வெளியில் செல்லுமாறு செய்தான். முனிவன் உருவத்தோடு அகலிகை முன் தோன்றினான். 18
அகலிகையை அவள் கணவன் உருவில் தழுவினான். அகலிகை முனிவன் என்று எண்ணித் தடுப்பது தக்கது அன்று என்று எண்ணி அவன் இன்பம் துய்க்கத் தாழ்ந்து கிடந்தாள். அப்போது முக்கண் சிவன் போன்ற முனிவன் அங்கு வந்துவிட்டான். 19
முனிவனைக் கண்ட அகலிகை நடுக்கத்துடன் நின்றாள். இந்திரன் பூனை வடிவம் கொண்டு நழுவினான். 20

பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன்,
'என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ ?
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக!' என்றான்             16

அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
'செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்;      17

'தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்.         18

'புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
'தக்கது அன்று' என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.   19

'சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான்.             20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 115

அகலிகை

அகலிகை
அகலிகை

மங்கையர் அரங்கினில் ஆடுவர். யாழும் முழவும் முழங்கும். இதனைக் கேட்டுப் பயந்து வாளைமீன் கமுகம்பாளை வரை எழும்பித் துள்ளிக் குதிக்கும். 11
மகளிரும், பறவைகளும் நீரில் குளிப்பர். அப்போது கடலைக் கடைவது போல நீர் அலைமோதும். மலர்களை வண்டினம் குடையும். 12
இப்படிப்பட்ட மிதிலை நாட்டின் மதிலுக்கு வெளியில் கருங்கல் மேட்டுப் பரப்பு ஒன்றினை மூவரும் கண்டனர். 13
இராமன் நடந்து சென்ற புழுதி அங்கிருந்த கல்லில் பட முனிவன் சாபத்தால் கல்லாய்க் கிடந்த அகலிகை தன் பண்டைய வடிவம் பெற்று எழுந்து நின்றாள். 14
அந்தப் பெண் மின்னல் போல் ஒதுங்கி நின்றாள். விசுவாமித்திரன் அவள் யார் என்று கூறலானான். வான்கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டுவந்தவன் மரபில் வந்த மைந்தனே! (இராமன்) தேவர் கோமான் இந்திரனுக்கு உடம்பில் ஆயிரம் கண்கள் தோன்றும்படியும், இவள் கல்லாகும்படியும் கோதம முனிவன் சாபம் தரக் கல்லாகி நின்றவள் இவள் என்று விசுவாமித்திரன் கூறினான். 15

இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை.   11

படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார்
குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள்.          12

இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்.  13

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:  14

'மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்' என்றான்.            15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 114

மிதிலை நாட்டு வளம்

உழத்தியர் கண் நிழலை நீரில் பார்த்த நாரை கயல்மீன் என்று எண்ணி கவ்விப் பார்த்து நாணும் வயல்கள் நிறைந்த மிதிலை நாட்டை மூவரும் அடைந்தனர். (இராமன், இலக்குவன், விசுவாமித்திரன்) 6
மதகில் பாயும் நீர் முழவின் ஒலியை எழுப்பிற்று. அசோகம்-பூக்கள் விளக்கு எரிவது போல் பூத்தன. பூக்களில் தேன் உண்டு பாடும் வண்டுகள் யாழிசை கூட்டின. மயில்கள் ஆடின. 7
காவிமலர் போன்ற கண் கொண்ட உழத்தியர் பார்வைத் தூதால் உழவர் மயங்கினர். 8
நடையைக் கண்ட அன்னம் உழத்தியரைத் தன் இனம் என எண்ணிக்கொண்டது. உழத்தியர் உரையைக் கேட்ட குயில்களும் அவ்வாறே தம் இனம் என்று எண்ணிக்கொண்டன. உழத்தியர் வயலில் ஓயாமல் நடப்பதால், வயலிலுள்ள பூக்கள் உறங்கினாலும் பறவைகள் உறங்குவதில்லை. 9
எருமை முலையில் சொரிந்த பால், உதிர்ந்த மாம்பழம் அழுகிய சாறு, கரும்பில் கட்டிய தேன் ஒழுகும் நறை – இவையே நீரில் கலந்திருந்தன. 10

பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார்.    6

வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
சுரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை.          7

பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8

தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை.             9

முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள்.                10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 113

யமுனை ஆறைக் கடந்து  கங்கை ஆற்றை அடைதல்
மணி ஆரமாகவும், சந்தனம், அகில் ஆகியவை முலைப் பூணாகவும், வஞ்சி மலர்கள் மேகலையாகவும், ஆற்றுமணல் படிவு கூந்தலாகவும், நீர் பாயும் வாய்க்கால்கள் ஒலிக்கும் சிலம்பாகவும் கொண்டு விளங்கும் சோணை என்னும் யமுனை ஆற்றை இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் ஆகிய மூவரும் கண்டனர்.  1
கதிரவன் அவர்களுக்குக் குளுமை செய்பவன் போல மேலைக் கடலில் மறைந்தான். 2
தாமரை என்னும் கோயில் தன் இதழ் வாயில்களை அடைத்துக்கொண்டது. அவர்கள் அந்த ஆற்றுநிலத்தைக் கடந்து ஒரு சோலையை அடைந்தனர். 3
திருமாலின் உந்தியில் பிரமன் தோன்றியது போல தாமரை மலரக் கதிரவன் முளைத்தான். 4
அங்கிருந்து சென்ற அவர்கள் கங்கை சூடிய சிவன் தலையில் கொன்றை பூத்திருப்பது போல் தோன்றும் காவிரி ஆறு போல் தோன்றும் கங்கை ஆற்றைக் கண்டனர். 5

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார்.    1

நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான்.          2

கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப,
பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார்.         3

காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்
நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். 4

அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார்.             5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 112

மிகைப் பாடல்கள் – பகுதி 3

வெள்ளி என்னும் சுக்கிரன் பெயர் கொண்ட அமைச்சன் மாவலி கொடுப்பதைத் தடுத்தான். அதனைக் கண்டித்து மாவலி கூறிகிறான். “வெள்ளியே! கொடுப்பதற்கு முன்னர் தடுக்கின்றாய். இது தகைமை ஆகுமா? நீ கொடியவன். உன் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கொடும். 21-1
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
அண்பதூஉம் இன்றிக் கெடும் – திருக்குறள்
தாரை வார்க்க மாவலி மன்னன் குண்டிகையில் நீர் ஊற்றும்போது சுக்கிரன் வண்டாக மாறிக் குண்டிகையில் நீர் வரும் வாயை அடைத்துக்கொண்டான். அதனை உணர்ந்த வாமணன் தன் தருப்பைப் புல்லை நுழைத்துக் குண்டிகை வாயிலிருந்த சுக்கிரன் கண்ணைக் குத்திக் குருடாக்கவிட்டான். சுக்கிரன் விலகிவிட்டான். 23-1
அடைத்திருந்த சுக்கிரனின் உடைந்த கண்ணிலிருந்து நீர் ஒழுக, வாமணன் கையை ஏந்தித் தாரை வார்த்த நீரை வாங்கிக்கொண்டான். 23-2

'எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்,
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கும் கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!.  21-1

குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை
மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்,
செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.         23-1

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம் அது அகத்துளான், சிலம்பின் நாமத்தான்,
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ,
வாட்டம் இல் அந்தணன் மலர்க் கை நீட்டினான்.     23-2   

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 111

மிகைப் பாடல்கள் – பகுதி 2 – கவுசிகை ஆற்றுப் பாடல் ஒலி

வாயு சென்ற பின்னர் 100 மகளிரும் தவழ்ந்து சென்று தந்தையிடம் கூறினர். தந்தை மகளிரைத் தேற்றி, பிரமதத்தன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான். 4-6
பிரமதத்தன் அவர்களை நீவியதும் அனைவரும் கூன் நிமிர்ந்தனர். இவன் குழந்தை இல்லாமையால் வேள்வி ஒன்று செய்தான். அதன் பயனாக் காதி என்பவன் மகனாகப் பிறந்தான். 4-7
இந்தக் காதிக்குப் பிரமதத்தன் ஆட்சியைக் கொடுத்தான். அந்தக் காதிக்கு நானும் (விசுவாமித்திரன்) கவுசிகை என்னும் பெண்ணும் பிறந்தோம். 4-8
பிருகு முனிவனின் மகன் இரிசிகன். இந்த இரிசிகனுக்கு என் தந்தை கவுசிகையை மணம் செய்து கொடுத்தார். 4-9
காதலன் இரிசிகன் நெடுந்தொலைவு சென்றுவிட்டான். அதனால் கவுசிகை ஆறாக மாறி ஓடிப் பாடலானாள். இதுதான் கவுசிகை ஆற்று ஓசை என்று விசுவாமித்திரன் இராமனுக்குக் கூறினான். 4-10

'சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே,
அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்,
நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை.      4-6

'அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்;
புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான்.           4-7

'அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து,
பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும்,
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன்.          4-8

'பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா,
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி,
விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான்.            4-9

காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
மீது உறப் பாடலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான்.               4-10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 110

மிகைப் பாடல்கள் – பகுதி 1 – நூறு மகளிர்

மானச மடுவில் தோன்றி ஓடிவருவருவதால் ‘சரயு’ என்று இந்த ஆற்றை அமரர்கள் போற்றுகிறனர். இந்த அற்றில் கோமதி என்னும் ஆறு வந்து கலக்கும் ஓசைதான் இங்குக் கேட்கின்றது என்று விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறினார். 4-1
“தேவர் தொழும் ஆறு என்றது ஏன்?” என்று இராமன் வினவினான். முனிவர் விளக்குகிறார். குசன் மக்கள் நான்பேர். 4-2
கவுசாம்பி நாட்டில் வாழ்ந்த குசன், மகோதயம் நாட்டில் வாழ்ந்த குசநாபன், தன்மவனம் என்னும் பகுதியில் வாழ்ந்த ஆதூர்த்தன், வக்கிரி-விரசம் என்னும் பகுதியில் வாழ்ந்த வசு என்போர் அந்த நால்வர். 4-3
இவர்களில் குசநாபர்க்கு நூறு பெண்பிள்ளைகள். இவர்கள் தம் தோழிமாருடன் பூங்காவில் இருந்தபோது ‘வாயு’ அவர்களைக் கவர நினைத்தான். 4-4
அவர்களிடம் சென்று “காமன் அம்புகளால் நோகிறேன். என்னை அணைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “என் தந்தையிடம் சொல்லுங்கள்; அவன் எங்களை உனக்குத் தாரை வார்த்துத் தந்தால் அணைக்கிறோம்” என்றனர். இச்சொற்களைப் பொறுத்துக்கொள்ளாத வாயு பலமாக வீசி அவர்களின் முதுகை ஒடித்தான். அதனால் அந்த மகளிர் அனைவரும் மண்ணில் வீழ்ந்தனர். 4-5

'மானச மடுவில் தோன்றி வருதலால், 'சரயு' என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன, அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்.              4-1

சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?' என்றே,
வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்;       4-2

'குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள்,
குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார்.      4-3

'அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி,
கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி,                4-4

'கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர்' என்று உரைப்ப, "எந்தை
அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும்" என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம்.                4-5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 109

மிதிலைக்குச் செல்லல்

“நீ வேள்வியைக் காத்தது என் பாக்கியம்” என்று விசுவாமித்திரன் இராமனைப் பாராட்டினான். 46
“இனி நான் என்ன செய்யவேண்டும்” என்று இராமன் முனிவனை வினவினான். 47
“மிதிலை அரசன் செய்யும் வேள்வியைக் கண்டுவரலாம், எழுக” என்றான் முனிவன். 48

'பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் - புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.'          46

என்று கூறிய பின்னர், அவ் எழில் மலர்க் கானத்து,
அன்று, தான் உவந்து, அருந் தவ முனிவரோடு இருந்தான்;
குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குருசில்,
'இன்று யான் செயும் பணி என்கொல்? பணி!' என இசைத்தான்.  47

'அரிய யான் சொலின், ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன்
புரியும் வேள்வியும், காண்டும் நாம்; எழுக!' என்று, போனார்.      48

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 108

வேள்வி முடிந்தது

இராமன் அம்பு தாடகை பெற்ற ஆண்பிள்ளைகள் இருவரில் சுபாகு என்பவனைக் கொன்றது. மாரீசன் என்பவனைக் கடலில் வீசியது. 41
பிணத்தின் மேல் நடந்து இராமன் நம்மையும் பிடிப்பான் என்று எண்ணி மற்ற அரக்கர்கள் அஞ்சி ஓடிவிட்டனர். 42
ஓடிய அரக்கரின் தலையை இராமன் அம்பு வீழ்த்திற்று. தலை இல்லாத முண்டங்கள் கூத்தாடின. பேய்கள் அவற்றை உண்டு இராமன் புகழைப் பாடின. பறவைகள் பிணம் உண்ணப் பந்தலிட்டது போலப் பறந்தன. 43
தேவர்கள் பொழிந்த பூ மழை பறவைப் பந்தலைக் கிழித்தது. இந்திரன் முதலான தேவர்கள் இராமனின் வில்லைத் தொழுது வாழ்த்தினர். 44
முனிவர்கள் பூமாரி பொழிந்தனர். மரங்களும் பூக்களைச் சிந்தின. விசுவாமித்திரன் தன் வேள்வியை முற்றிலுமாக நிறைவேற்றினான். இராமனிடம் கூறலானான். 45

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.            41

துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
'பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு' எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார்.            42

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே.         43

பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.                44

புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்;            45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 107

அரக்கர் தோற்றம்
அரக்கர்களைக் கொல்லல்

உணவைக் கவர வெளியில் தெரியும் பல், அந்தப் பல் கடித்துக்கொண்டிருக்கும் வாய், செந்நிறத் தலைமுடி, கண்ணில் உழலும் தீ ஆகிய தோற்றம் கொண்டவர் அரக்கர். முனிவர் சொன்ன அரக்கர் இவர்கள் என்று இராமன் இலக்குவனுக்கு அவர்களைக் காட்டினான். 36
இவர்கள்ளின் உடல் துண்டாகி விழுவதை இனிப் பார் என்று சொல்லிக்கொண்டு இலக்குவன் தன் வில்லையும், அரக்கரையும் பார்த்தான். 37
அரக்கர் தசைகளும் இரத்தமும் வேள்வித் தீயில் விழும் என்று இராமன் தன் அம்புகளால் வேள்விக்கு மேல் கூடாரம் அமைத்தான். 38
பிறைநிலா சிவனைத் தஞ்சம் அடைந்தது போல, முனிவர்கள் “இராமா! அபயம்” என்றனர். 39
“கலங்காதீர்கள்” என்று சொல்லிக்கொண்டு அம்பெய்து அரக்கரின் தலைகளை இருவரும் குன்றாகக் குவித்தனர். 40

கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
'பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்' என, இலக்குவற்கு இராமன் காட்டினான்.       36

ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக,
விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்;
'அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன' என, தொழுது சொல்லினான்.     37

'தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும்' என்று உன்னி, அத்
தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு,
கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான்.              38

நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
'அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்' என்றார்.             39

தவித்தனன் கரதலம்; 'கலங்கலீர்' என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.            40

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 106

அரக்கர் படை

“தீத்தொழில் புரியும் அரக்கர் வருவது எப்போது” என்று ஆறு நாள் காவலுக்குப் பின்னர் முனிவரை இராமன் வினவினான். 31
விசுவாமித்திர முனிவர் எதுவும் கூறவில்லை. அப்போது வானில் இடி முழங்குவது போன்ற ஆரவாரம் கேட்டது. 32
அம்பு எய்தும், ஈட்டி எறிந்தும், மலைகளைப் பிடுங்கிப் போட்டும், வாயில் வந்தபடி வைதுகொண்டும் எண்ணிலா மாயங்களை அரக்கர்கள் செய்தனர். 33
வளைத்துக்கொண்டு வந்த படை வானத்தையே மறைத்தது. 34
வில் வாள் மழையாகப் பொழிந்தன. இசைக்கருவிகள் இடியாக முழங்கின. 35

காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, 'நீ,
தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று?' என்றான்.     31

வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்;
போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின்,
பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே.        32

எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர், ஒன்று அல தீய மாயமே.   33

ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
கானகம் மறைத்தன, கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென,
வானகம் மறைத்தன, வளைந்த சேனையே.               34

வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட,
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை,
'ஒல்' என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்,
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே.           35

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 105

மாவலி தலைமேல் வாமணனின் மூன்றாவது தப்படி

மாவலி தலைமேல் வாமணனின் மூன்றாவது தப்படி
இராமனும் இலக்குவனும் விசுவாமித்திர முனிவர் வேள்வியைக் காத்தல்

வானளாவ உயர்ந்த குறளன் மூன்றாவது தப்படிக்கு மாவலியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டான். 26
மாவலி பிடுங்கிக்கொண்ட இந்தச் சோலையை இந்திரனுக்குக் கொடுத்துவிட்டுத் திருமால் பாற்கடலில் பள்ளிகொள்ளச் சென்றுவிட்டார். அவரது காலடிகளைத் திருமகளின் கைகள் சிவந்து காட்டுகின்றன. 27
இப்படி இந்திரன் பெற்ற இந்தச் சோலைதான் வேள்வி செய்வதற்கு ஏற்ற இடமாகும் என்று விசுவாமித்திரர் இராமனிடம் கூறினார். 28
இராமன் இலக்குவன் இருவரையும் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு அந்தச் சோலையில் விசுவாமித்திரர் வேள்வி செய்யலானார். 29
கண்ணைக் காக்கும் இமை போல இராமனும் இலக்குவனும் வேள்வியை ஆறு நாள் காத்தனர். 30

'உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே!         26

'"உரியது இந்திரற்கு இது" என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! 27
  
'ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே.         28

'ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான்' எனா,
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின்
வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
காண்தகு குமரரைக் காவல் ஏவியே.   29

எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்.       30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 104

அளக்க உயர்ந்த கால் வானுலகையும் மண்ணுலகையும் இரண்டு தப்படிகளால் அளந்தது
விசுவரூபம்

மாவலி கூறுகிறான். தானம் கேட்டு வருபவர் பழி உண்டாக்குபவர் அல்லர். கொடுப்பவரைத் தடுப்பவரே பகைவர். 21
கையில் உள்ளபோதே கொடுத்தல் அறம். தடுப்பது உலோபம். 22
இவ்வாறெல்லாம், அமைச்சன் கூற்றைத் தடுத்துக் கூறிய மாவலி, “உன் காலடிகளால் மூன்று அடி அளந்துகொள்க” என்று கூறிக்கொண்டு வாமணன் கையிலிருந்த கண்டிகை நீரை வாங்கித் தாரை வார்ந்தான். 23
மாவலி தாரை வார்த்த நீர் கையில் பட்டதும் வாமணன் வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல உயர்ந்தான். 24
அளக்க உயர்ந்த கால் வானுலகம் மண்ணுலகம் அனைத்தையும் இரண்டு தப்படிகளால் அளந்துவிட்டது. 25

'"அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, 'கொடேல்' என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை" என்றான்.   21

'"கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
'விட்டிடல்' என்று விலக்கினர் தாமே."              22

'முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
"கொடியன்" என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
"அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க" என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.          23

'கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் -
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.       24

'நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே.              25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...